×

உக்கடம்-ஆத்துபாலம் இரண்டாம் கட்ட மேம்பால பணிகள் நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் துவக்கும்

கோவை, ஜன. 1: கோவை உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பால பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது. கரும்புக்கடை முதல் ஆத்துபாலம் வரையிலான இரண்டாம் கட்ட மேம்பால பணிகள் விரைவில் துவங்க உள்ளன. கோவை உக்கடம்-ஆத்துப்பாலம் சாலை பொள்ளாச்சி செல்வதற்கும், குனியமுத்தூர் வழியாக கேரளா மாநிலம் செல்வதற்கும் முக்கிய சாலையாக உள்ளது. இச்சாலையில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக உக்கடம்-ஆத்துப்பாலம் இடையே 1.9 கிலோ மீட்டர் தூரம் வரை மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கியது. முதல் கட்டமாக உக்கடம் முதல் கரும்புக்கடை இடையே உள்ள மேம்பால பணிகளுக்கு ரூ.216 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
உக்கடம்-கரும்புக்கடை வரை 55 தூண்கள் அமைக்கப்பட்டு அதில் ஓடுதளம் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. மேலும் உக்கடம் பேருந்து நிலையம் அருகே மேம்பாலத்தில் ரவுண்டானா அமைப்பதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனிடையே  இரண்டாம் கட்ட மேம்பால பணிகள் கரும்புக்கடை முதல் ஆத்துப்பாலம் வரை விரைவில் துவக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து மாநில நெடுஞ்சாலை துறையினர் கூறுகையில், ‘‘உக்கடம் -ஆத்துப்பாலம் இடையே இரண்டாம் கட்ட மேம்பால பணிகளுக்காக ரூ.152 கோடியில் டெண்டர் கோரப்பட உள்ளது. இன்னும் ஒரிரு மாதங்களில் இரண்டாம் கட்ட மேம்பால பணிகள் துவங்கும். முதல் கட்ட மேம்பால பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளன. உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலத்தில் மூன்று இடங்களில் இறங்கு தளங்கள் அமைக்கப்பட உள்ளன. போத்தனூர் பிரிவு, ஆத்துப்பாலம், உக்கடம் பேருந்து நிலையம் ஆகிய மூன்று பகுதிகளில் யூ வடிவிலான ஏறுதளம் மற்றும் இறங்கு தளங்கள் அமைக்கப்பட உள்ளன’’ என்றனர். இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பால பணிகளில் உக்கடம் முதல் கரும்புக்கடை வரை நிலம் கையகப்படுத்தப்பட்டு முதல் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. கரும்புக்கடை முதல் ஆத்துப்பாலம் வரையிலான இரண்டாம் கட்ட மேம்பால பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவில் துவங்கும். இதற்காக கருத்துகேட்பு கூட்டங்கள் நடத்தப்படும். பின்னர் நில உரிமையாளர்களின் ஒப்புதலுடன் நிலம் கையகப்படுத்தப்பட்டு அதற்கான இழப்பீடுகள் உடனடியாக வழங்கப்படும்’’ என்றனர்.

Tags : Ukkadam-Athupalam ,
× RELATED மேம்பால பணிக்காக 40 கட்டடங்கள் இடிப்பு