ஊத்துக்கோட்டை: திருக்கண்டலம் கிராமத்தில் மினி கிளினிக் திறப்பு விழாவில் பெண்கள் புடவையை வாங்க முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பெரியபாளையம் அருகே திருக்கண்டலம் கிராமத்தில், ‘மினி கிளினிக் திறப்பு விழா’ நேற்று நடைபெற்றது. இதில், ஊராட்சி மன்ற தலைவர் மதன் என்ற சத்தியராஜ் தலைமை தாங்கினார். சுகாதார பணிகளின் துணை இயக்குனர் ஜவகர்லால், வட்டார மருத்துவ அலுவலர் பிரபாகரன், ஒன்றிய கவுன்சிலர் ரவி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் விவேகானந்தன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார மேற்பார்வையாளர் ஜெகந்நாதலு, சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணி வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார், மினி கிளினிக்கை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சி முடிந்து எம்எல்ஏ சென்ற பிறகு அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெண்களுக்கு புடவை மற்றும் காலண்டர் வழங்கினார். இதில், புடவை வாங்க பெண்கள் முண்டியடித்து சென்றனர். இதனால், தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில், சில பெண்கள் புடவை கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். இதனால், திருக்கண்டலம் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சியில் முன்னதாக கர்ப்பிணி பெண்களுக்கு அம்மா பெட்டகம் மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டது.