ஊட்டி, டிச. 31: ஊட்டி அருகேயுள்ள பெர்ன்ஹில் பகுதியில் பவாணீஸ்வரர் கோயிலில் 109வது ஆருத்ரா தரிசன மகோற்சவ விழா கடந்த 29ம் தேதி துவங்கியது. அன்று காலை 9.30 மணிக்கு கணபதி, சூரிய பகவான் பூஜை, மதியம் 2 மணிக்கு நடராஜர் அபிஷேகம், சிறப்பு ஹோமம் மற்றும் பூர்ணஹூதி, மகா தீபாராதனை உள்ளிட்டவை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இம்முறை கொரோனா கால கட்டம் என்பதால் தேர் ஊர்வலம் கோயில் வளாகத்தில் துவங்கி மினிக்கிமந்து சந்திப்பு வரை கொண்டு வரப்பட்டு மீண்டும் கோயிலை சென்றடைந்தது. இதில் தோடர் பழங்குடியின மக்கள் பங்கேற்றனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பவாணீஸ்வரர் கோவிலின் பரம்பரை அறங்காவலர் காந்தராஜ் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.