டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நவம்பர் 23-ம் தேதி தனது பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். இந்த சூழலில், அடுத்த தலைமை நீதிபதியைத் தேர்ந்தெடுக்கும் பணியை ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது. விதிகளின்படி, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிக்குப் பிறகு மூத்த நீதிபதி இந்தப் பதவியைப் பெறுகிறார். இதற்காக அப்போதைய தலைமை நீதிபதியிடம் இருந்து பரிந்துரை பெறப்படும். அந்த வகையில், தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான பி.ஆர்.கவாய்-இடம் பரிந்துரை கோரப்பட்டது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தனக்குப் பிறகு மூத்த நீதிபதியான நீதிபதி சூர்யகாந்த் அடுத்த தலைமை நீதிபதியாக இருப்பார் என்றும் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அறிவித்துள்ளார். நவம்பர் 24ம் தேதி தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவி ஏற்றால் 2027ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி வரை பதவியில் நீடிப்பார்
நீதிபதி சூர்யகாந்த் யார்?
இவர் தற்போது தலைமை நீதிபதி கவாய்க்குப் பிறகு மூத்த நீதிபதியாக உள்ளார். ஹரியானாவின் ஹிசாரில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த நீதிபதி சூர்யகாந்த் தனது குழந்தைப் பருவம் முழுவதையும் கூட்டுக் குடும்பத்தில் கழித்தார். அவரது தந்தை ஒரு ஆசிரியர். தனது கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மெட்ரிகுலேஷன் வரை கல்வியை முடித்தார்.
நீதிபதியாக மாறுவதற்கு முன்பு, காந்த் ஒரு மூத்த வழக்கறிஞராக இருந்தார் மற்றும் ஹரியானாவின் அட்வகேட் ஜெனரலாக பணியாற்றினார். ராஞ்சியில் உள்ள தேசிய சட்ட ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் பார்வையாளராகவும் உள்ளார். இது தவிர, அவர் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் முன்னாள் அலுவல் நிர்வாகத் தலைவராகவும் உள்ளார்.
1981 இல் ஹிசாரில் உள்ள அரசு முதுகலை கல்லூரியில் பட்டம் பெற்றார், பின்னர் 1984-ல் ரோஹ்தக்கில் உள்ள மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்றார். அவர் இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். நீதிபதி சூர்யகாந்த் அடுத்த தலைமை நீதிபதியாக 24 நவம்பர் 2025 அன்று பதவியேற்க உள்ளார்.
