சென்னை: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து, தனியார் பயணிகள் விமானம் ஒன்று, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று அதிகாலை வந்தது. அதில் பெரும் அளவு போதைப்பொருள் கடத்திக் கொண்டு வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் அந்த விமானத்தில் வந்த பயணிகளை, தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது வடமாநிலத்தைச் சேர்ந்த பயணி ஒருவர் சுற்றுலாப் பயணி விசாவில் தாய்லாந்து நாட்டிற்கு சென்று விட்டு, திரும்பி வரும்போது, வடமாநிலத்திற்கு செல்லாமல் சென்னைக்கு வந்திருந்தார். இதையடுத்து அவர் மீது, சுங்கத்துறை ஏர் இன்டலிஜென்ட் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.
இதையடுத்து அந்த பயணியையும், அவரது உடைமைகளையும் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று, தீவிர விசாரணை நடத்தியதோடு, அந்த பயணியின் உடைமைகளை சோதித்தனர். அதற்குள் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் பாக்கெட்கள் அதிக அளவில் இருந்தன. அந்த பாக்கெட்டுகளை எடுத்து பிரித்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். அவற்றில் பதப்படுத்தப்பட்ட உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். சுமார் 10 கிலோ ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சா இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.10 கோடி. அதை பறிமுதல் செய்து, வடமாநில பயணியை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.
போதைப்பொருள் கடத்தும் கும்பல் இவரை கூலிக்காக தாய்லாந்து நாட்டிற்கு அனுப்பி வைத்து, இவர் மூலம் கஞ்சா கடத்திக் கொண்டு வந்தது தெரியவந்தது. அதோடு சென்னை விமான நிலையத்தில் கஞ்சா கடத்தும் கும்பலைச் சேர்ந்த மற்றொருவர் வடமாநில பயணியிடம் இருந்து கஞ்சாவை வாங்கிக்கொண்டு, அவருக்கு கொடுக்கவேண்டிய கூலியை கொடுத்து அனுப்ப இருந்ததும் தெரிய வந்தது. அவரிடம் கஞ்சாவை வாங்கிச் செல்ல வந்த கடத்தல் ஆசாமி யார் என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
