நெல்லை, டிச. 30: நெல்லை அருகேயுள்ள செப்பறை அழகிய கூத்தர் சுவாமி கோயிலில் திருவாதிரை திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. ராஜவல்லிபுரம் தாமிரசபை செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் திருவாதிரை திருவிழா, கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்து வந்தது. 27ம் தேதி அழகியகூத்தர் சபையில் இருந்து விழா மண்டபத்திற்கு எழுந்தருளும் வைபவம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான திருவாதிரை திருவிழா தேரோட்டம் நேற்று காலை நடந்தது.
இதையொட்டி அதிகாலை சிறப்பு பூஜைக்குபின் சுவாமி, அம்பாள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. ரதவீதிகள் வழியாக சென்று தேர், நிலையத்தை வந்தடைந்தது. விழாவில் பக்தர்கள், சமூக இடைவெளியை கடைபிடித்தும், முககவசங்கள் அணிந்தும் பங்கேற்றனர். பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று அதிகாலை 2 மணிக்கு மகா அபிஷேகம் தொடங்கி, காலை 5 மணிக்கு கோபூஜையும், ஆருத்ரா தரிசனமும் நடந்தது. மதியம் 1 மணிக்கு நடன தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் அலுவலர்கள், நிர்வாகிகள் செய்துள்ளனர்.
நெல்லையப்பர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்: டவுன் நெல்லையப்பர் கோயிலில் மார்கழி திருவாதிரை திருவிழா கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கடந்த 21ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி, அம்பாள், நடராஜர், சிவகாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார, தீபாராதனை நடந்தது. 9ம் திருநாளான நேற்று தாமிரசபையில் நடராஜருக்கு திருநீராட்டு அபிஷேகம் நடந்தது. திருவிழாவின் சிகரமாக நடராஜரின் ஆருத்ரா தரிசனத்தை காண அதிகாலை முதலே பக்தர்கள் குவியத் துவங்கினர். அதிகாலை 3 மணிக்கு பசு தீபாராதனை, தொடர்ந்து நடராஜரின் திருநடன காட்சியான ஆருத்ரா தரிசனமும் நடந்தது.
இதை நெல்லை மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட திரளானோர் தரிசித்தனர். இதேபோல் பாளை திரிபுராந்தீஸ்வரர் கோயில், வண்ணார்பேட்டை அருணாசலேஸ்வரர் கோயில், சந்திப்பு கைலாசநாதர் கோயில், சொக்கநாதர் கோயில், தச்சநல்லூர் நெல்லையப்பர் கோயில், குறிச்சி சொக்கநாதர் கோயில், டவுன் தொண்டர்கள் நயினார் சன்னதி கோயில் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசனத்தை காண பெண்கள் உள்ளிட்ட திரளானோர் குவிந்தனர்.