- சென்னை
- தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் 2025
- பொது சுகாதார அமைச்சர்
- எம் சுப்பிரமணியன்
- இந்து மத மற்றும் தொண்டு நிறுவனங்கள்
- அமைச்சர்
- சேகர்பாபு
சென்னை: சென்னை தனியார் ஓட்டலில் 2025ம் ஆண்டு தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் வழங்கும் விழா மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் 31 தொழில் நிறுவனங்கள், ஓட்டல்கள், டிராவல் நிறுவனங்கள், அரசுத்துறைகள் உள்ளிட்ட சுற்றுலா செயல்பாட்டாளர்களுக்கு அமைச்சர்கள் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்கினர்.
முதல்வரின் சிறப்பான நடவடிக்கைகளால் தற்போது இந்தியாவிலேயே தமிழ்நாடு, சுற்றுலாத்துறையில் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. நாட்டின் சமூக, பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலாத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் தொடர்ச்சியாக, சுற்றுலாவின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கும் பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் வழங்கப்படும் என முதல்வரால் அறிவிக்கப்பட்டு, கடந்த 2022ம் ஆண்டு முதல் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டிற்கான சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த பயண பங்குதாரர், சிறந்த தங்குமிடம், சிறந்த உணவகம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சிறந்த தங்குமிடம் மற்றும் படகு இல்லம், சுற்றுலா ஊக்குவிப்பிற்கான சிறந்த மாவட்டம், சுத்தமான சுற்றுலாத்தலம், பல்வேறு சுற்றுலாப் பிரிவுகளின் சிறந்த ஏற்பாட்டாளர், பல்வேறு சுற்றுலாப் பிரிவுகளின் சிறந்த ஏற்பாட்டாளர் மருத்துவம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலா நிறுவனம்,
சிறந்த சாகச மற்றும் தங்கும் முகாம்கள் சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த சுற்றுலா வழிகாட்டி, சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் சிறந்த கல்வி நிறுவனம் உள்ளிட்ட 13 வகையான விருதுகள் 31 தொழில் நிறுவனங்கள், ஓட்டல்கள், டிராவல் நிறுவனங்கள், அரசுத்துறைகள் உள்ளிட்ட சுற்றுலா செயல்பாட்டாளர்களுக்கு வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், மேயர் பிரியா, சுற்றுலாத்துறை செயலாளர் மணிவாசன், இயக்குநர் கிறிஸ்துராஜ், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொது மேலாளர் கவிதா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
