சென்னை: வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற வாய்ப்பில்லை என்றும், இதனால் தமிழகத்தில் புயல் அபாயம் நீங்கியது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை தொடரும் வாய்ப்புள்ளது என்றும் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி எதிரொலியாக தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் பல மாவட்டங்களில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து பெய்த கனமழையால் தமிழகம் முழுவதும் பரவலாக அணைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக, புதுச்சேரி காலாப்பட்டில் 25 செமீ, புதுச்சேரி நகரத்தில் 21 செமீ, புதுச்சேரி பாகூரில் 19 செமீ, விழுப்புரம் மாவட்டம் வானூர், கடலூரில் தலா 18 செமீ, விழுப்புரம், திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, கடலூர் மாவட்டம் கொத்தவாச்சேரி, கடலூர் மாவட்டம் வனமாதேவியில் 17 செமீ, புதுச்சேரி பத்துக்கண்ணு, திருக்கனூர், கடலூர் மாவட்டம் குடிதாங்கியில் தலா 15 செமீ மழை பதிவாகியுள்ளது.
தொடர் கன மழையால் பல்வேறு நீர்நிலைகளில் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. வேகமாக அணைகள் நிரம்பி வருவதால் பாதுகாப்பு கருதி பல்வேறு அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. . இந்நிலையில், வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நிலவுகிறது. இது, இன்று வட தமிழகம், புதுச்சேரி தெற்கு ஆந்திர கடலாரப் பகுதிகளை கடந்து செல்லக்கூடும் என்று தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, வடக்கு – வட மேற்கு திசையில் இன்று நகர்ந்து செல்லக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் புயல் அபாயம் நீங்கியது.
அதேநேரம், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் வரும் 28ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 24ம் தேதி கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 26, 27 மற்றும் 28ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களுக்கும் மற்றும் புதுச்சேரிக்கும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோன்று, வட தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
⦁ தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
1) 24ம் தேதி கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
2) 26, 27 மற்றும் 28ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களுக்கும் மற்றும் புதுச்சேரிக்கும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
3) சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
