×

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: 20 மாவட்டங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட்

சென்னை: இந்திய பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவமழை நேற்றுடன் விலகிய நிலையில், வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, வட கிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை நேற்றுடன் விலகிவிட்டது. அதன் தொடர்ச்சியாக அக்டோபர் 20ம் தேதி தொடங்க வேண்டிய வட கிழக்கு பருவமழை 4 நாட்கள் முன்கூட்டியே தமிழகத்தில் பெய்யத் தொடங்கியுள்ளது. அதன்படி தீவிரம் அடைந்துள்ளது.

இதன் காரணமாக தஞ்சாவூர், சென்னை, நீலகிரி, தர்மபுரி, ஈரோடு, மதுரை, நாகப்பட்டினம், திருநெல்வேலி, திருப்பத்தூர், வேலூர், மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையில் குறைந்துள்ளது. கடலூர், திருச்சி மாவட்டங்களில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரையும் குறைந்துள்ளது. இந்நிலையில், தமிழக கடலோரம் மற்றும் அதை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் நிலை கொண்டு இருந்த வளி மண்டல கீழடுக்கு சுழற்சி குமரிக் கடல் பகுதி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.

இதையடுத்து 19ம் தேதி முதலம் தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் கேரளா-கர்நாடக பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வின் காரணமாக தமிழகத்தில் தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்கள் உள்பட 24 மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்துள்ளது. இதையடுத்து, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.

மேலும், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேநிலை 22ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. மேலும், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும்.

Tags : Tamil Nadu ,Chennai ,India ,Chennai Meteorological Department ,
× RELATED கலைஞரால் உருவாக்கப்பட்ட முத்தமிழ்ப்...