மார்த்தாண்டம், டிச.26: மார்த்தாண்டத்தில் ராஜேஷ் குமார் எம்எல்ஏ, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல், 2021 தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள் இரண்டும் இணைந்து வரும் என தெரிகிறது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு யாருக்கு சீட் கொடுத்தாலும் வெற்றிக்காக பாடுபடுவோம். கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவது குறித்து கட்சியில் அனைவருக்கும் கருத்து கூற உரிமை உண்டு. மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு வெற்றிக்காக பாடுபடுவோம். நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் சிறந்த நடிகர்கள். எம்ஜிஆர் வெற்றி பெற்றார் என்றால் அன்றைய சூழ்நிலை அவ்வாறு அமைந்திருந்தது. ஆனால் ரஜினி மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்கு வாக்குச்சாவடி முகவர்கள் கூட கிடையாது. இப்படி இருக்கும்போது இவர்களால் தேர்தலில் வெற்றி பெற முடியாது. காங்கிரஸ்- திமுக கூட்டணி பலமாக உள்ளது. பாரதிய ஜனதா ஏ-டீம், ரஜினிகாந்த் கட்சி பி- டீம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். பேட்டியின் போது மாநில பொதுக்குழு உறுப்பினர் ரத்தினகுமார், வர்த்தக காங்கிரஸ் தலைவர் ஆமோஸ், இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் திபாகர் உட்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.