செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் அடுத்த சாலூர் பகுதியை சேர்ந்தவர் அகத்தியன் (32). கூலி தொழிலாளி. கடந்த 2 நாட்களுக்கு முன் அகத்தியன் வீட்டில் இருந்தார். அப்போது, அங்கு வந்த மர்மநபர்கள் சிலர், அவரையும் குடும்பத்தினரையும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிவிட்டு சென்றனர். இதில் படுகாயடைந்த அகத்தியன், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இது தொடர்பாக, திருக்கழுக்குன்றம் போலீசில் அகத்தியன் புகார் அளித்தார். அதில், அதிமுக பிரமுகர், முன் விரோதம் காரணமாக, அடியாட்களை வைத்து, தன்னையும், தனது குடும்பத்தினரையும் வீடு புகுந்து தாக்கியதாக கூறியிருந்தார். ஆனால், போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், புகார் கூறப்பட்ட அதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்காத திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் முனிசேகர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 100க்கு மேற்பட்ட பெண்கள், செங்கல்பட்டு எஸ்பி அலுவலகத்துக்கு நேற்று சென்றனர்.
அங்கு அவர்கள், திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த எஸ்பி கண்ணன், பொதுமக்களிடம் சமரசம் பேசினார். பின்னர், திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் முனிசேகரை, செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, பொதுமக்கள் புகார் கொடுத்தால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆய்வாளர் என்ற நிலையில், நீங்கள் உரிய நடவடிக்கை எடுத்தால், பொதுமக்கள் எஸ்பியிடம், உங்கள் மீது ஏன் புகார் கொடுக்க வந்தனர் என கேட்டார். மேலும், இந்த புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து பொதுமக்கள், கலைந்து சென்றனர். இதனால், செங்கல்பட்டு எஸ்பி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.