×

தேசிய, மாநில, ஊராட்சி சாலைகளில் கட்சிகள் சார்பில் கொடிக்கம்பங்கள் அமைப்பது தொடர்பான விதிமுறைகள் வெளியீடு: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு

சென்னை: கொடிக்கம்பங்கள் அமைப்பது தொடர்பாக அரசாணை, வழிகாட்டி விதிமுறைகளை வகுத்துள்ள தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இவற்றை அமல்படுத்தாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக் கம்பங்களை 2025 ஏப்ரல் 28க்குள் அகற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்களின் கலெக்டர்கள் நேரில் ஆஜராகி இருந்தனர்.அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, கொடிக்கம்பங்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக மண்டல மற்றும் மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி அதற்கான அரசாணையை தாக்கல் செய்தார்.

அதேபோல் கொடிக்கம்பங்கள் அமைப்பதற்கான வழிகாட்டு விதிமுறைகளை அரசு வகுத்துள்ளதாக கூறி அதையும் தாக்கல் செய்தார். அவர் வாதிடும்போது, அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்காக கொடிக்கம்பங்கள் அமைக்கும் போது, சாலையில் தார்கள் மீதும், சாலை நடுவில் உள்ள சென்டர் மீடியன் பகுதிகளில் கொடிக்கம்பங்கள் அமைக்க கூடாது. மூன்று நாட்களுக்கு மேல் கொடிக்கம்பங்களை வைத்திருக்க கூடாது என்பன உள்ளிட்ட வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது என்றார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, கொடிக்கம்பங்கள் அமைப்பது தொடர்பாக அரசாணையும், வழிகாட்டு விதிமுறைகளும் பிறப்பித்த தமிழக அரசை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. இந்த விதிமுறைகளையும், அரசாணையையும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். இவை ஆளுங்கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும்படி பாரபட்சமின்றி பின்பற்ற வேண்டும்.இந்த வழிகாட்டு விதிமுறைகளை அமல்படுத்தாமல் மீறி செயல்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து விசாரணையை அக்டோபர் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags : Madras High Court ,Tamil Nadu government ,Chennai ,Tamil Nadu ,
× RELATED தறிக்கெட்டு ஓடிய தனியார் கம்பெனி வேன்...