சென்னை: டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தர ராஜ் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: குரூப் 2ஏ பணிகள் தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அறிவிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு மூன்றாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகிற 23ம் தேதி சென்னை பிராட்வேயில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. பட்டியல் www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. அழைப்பாணையினை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தேர்வர்களுக்கு அதற்கான விவரம் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான அழைப்பாணை தனியே அஞ்சல் மூலம் அனுப்பப்படமாட்டாது. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு, தெரிவு செய்யப்படுவார்கள் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது. தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்துகொள்ளத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
