- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- மோடி
- சென்னை
- யூனியன் அரசு
- சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்
சென்னை: ஒன்றிய அரசு பொதுமக்கள் கருத்து கேட்பில் இருந்து சில சுரங்க திட்டங்களுக்கு விலக்கு அளித்துள்ளதால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள குறிப்பாணையை திரும்ப பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு பிரிவால் 08.09.2025 அன்று வெளியிடப்பட்டுள்ள அலுவலக குறிப்பாணையின் மீது கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். அந்த குறிப்பாணையின் மூலம், பகுதி B-ல் அறிவிக்கப்பட்ட அணு கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் முதல் அட்டவணையின் பகுதி D-ல் அறிவிக்கப்பட்ட முக்கியமான மற்றும் அரிய வகை கனிமங்களின் அனைத்து சுரங்க திட்டங்களும் பொதுமக்கள் கருத்து கேட்பின் தேவையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.
மேலும், அத்தகைய அனைத்து திட்டங்களும் சம்பந்தப்பட்ட குத்தகை பகுதியின் அளவை கருத்தில் கொள்ளாமல், ஒன்றிய அளவில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் கடற்கரை மணல் அமைப்புகளில் படிந்துள்ள அரிய மண் கனிம கூறுகளின் படிவுகளை கொண்டுள்ளன. இந்த கடற்கரைகள் சுற்றுச்சூழல் ரீதியாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவை. மன்னார் வளைகுடா மற்றும் பாக் விரிகுடாவின் மணல் கடற்கரைகள் அழிந்து வரும் ஆமைகளின் இனப்பெருக்கம், பவளப்பாறைகள், சதுப்பு நிலங்கள் மற்றும் மணல் திட்டுகளுக்கு தாயகமாக உள்ளன.
அவை கடலரிப்பு மற்றும் சூறாவளி நிகழ்வுகளுக்கு எதிராக இயற்கை கேடயங்களாக செயல்படுகின்றன. மேலும், இந்த சுற்றுச்சூழல் அமைப்புகள் பல்லுயிரியலை நிலைநிறுத்துகின்றன; கரையோரங்களை உறுதிப்படுத்துகின்றன; கார்பனை பிரித்தெடுக்கின்றன மற்றும் கடல் அரிப்பில் இருந்து சமூகங்களை பாதுகாக்கின்றன. இத்தகைய பகுதிகளில் சுரங்கம் என்பது இயல்பாகவே சுற்றுச்சூழல் பாதிப்புகளை கொண்டது. எனவே, உள்ளூர் சமூகங்களின் முழுமையான ஈடுபாட்டுடன் கடுமையான ஆய்வு தேவைப்படுகிறது.
1997ம் ஆண்டு திருத்தப்பட்ட 1994ம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பு, கட்டாய பொதுமக்கள் கருத்து கேட்புகளை அறிமுகப்படுத்தியது. இந்த பங்கேற்பு சுற்றுச்சூழல் நிர்வாகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறி, ஒரு மைல்கல்லாக திகழ்கிறது. இந்த பாதுகாப்பு 2006ம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பில் வலுப்படுத்தப்பட்டது. பொதுமக்கள் கருத்து கேட்பில் இருந்து திட்டங்களுக்கு விலக்கு அளிப்பது என்பது, வாழ்வாதார இழப்பு, இடப்பெயர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பான நியாயமான கவலைகளை எழுப்பும் உள்ளூர் சமூகங்களின் உரிமையை பறிக்கும்.
இது மக்கள் பங்கேற்கும் ஜனநாயகத்தின் கொள்கைகளை பலவீனப்படுத்தும். ஒன்றிய அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த குறிப்பாணை, கடுமையான சட்டரீதியான கவலைகளையும் எழுப்புகிறது. தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த காலங்களில் சட்டப்பூர்வ பாதுகாப்புகளை நீர்த்துப்போகச் செய்யும் இத்தகைய அலுவலக குறிப்பாணைகளை ரத்து செய்துள்ளது. Alembic Pharmaceuticals Ltd. v.Rohit Prajapati & Ors. (2020) வழக்கில், உச்சநீதிமன்றம், அலுவலக குறிப்பாணைகள் போன்ற நிர்வாக அறிவுறுத்தல்கள் மூலம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு கட்டமைப்பில் கணிசமான திருத்தங்களை கொண்டு வரமுடியாது என்றும், அத்தகைய கருவிகள் சட்டப்பூர்வ அறிவிப்புகளை மீற முடியாது என்றும் தீர்ப்பளித்துள்ளது. தற்போதைய அலுவலக குறிப்பாணை பொதுமக்கள் கருத்து கேட்பிற்கு வழிவகுக்காமல், அனுமதிக்க முடியாத நிர்வாக சட்டத் திருத்தத்திற்கு சமமாக உள்ளது.
எனவே இது நிலைக்கத்தக்கதல்ல. இவை நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் விவாதிக்கப்பட வேண்டும். மாநில அரசுகள் மற்றும் பொதுமக்களின் உரிய ஆலோசனையுடன் செய்யப்பட வேண்டும். இந்த நடைமுறைகளை பின்பற்றாத இத்தகைய அறிவிப்புகள் கூட்டாட்சி உணர்வுக்குஎதிரானது. இதை கருத்தில் கொண்டு, 08.09.2025 நாளிட்ட அலுவலக குறிப்பாணையை உடனடியாக திரும்பப் பெறுமாறு ஒன்றிய அரசை தான் வலியுறுத்துகிறேன். கடந்த காலங்களில் எப்போதும் செய்யப்பட்டது போல, நாட்டின் முன்னேற்றத்திற்கு மற்றும் பாதுகாப்பு தேவைகளுக்கு பங்களிப்பதற்கான தமிழ்நாட்டின் உறுதிப்பாட்டை இத்தருணத்தில் மீண்டும் தான் வலியுறுத்த விரும்புகிறேன். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் கூறியுள்ளார்.
* 1997ம் ஆண்டு திருத்தப்பட்ட 1994ம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பு, கட்டாய பொதுமக்கள் கருத்துகேட்புகளை அறிமுகப்படுத்தியது.
* இந்த பங்கேற்பு சுற்றுச்சூழல் நிர்வாகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறி, ஒரு மைல்கல்லாக திகழ்கிறது.
* பொதுமக்கள் கருத்துகேட்பில் இருந்து திட்டங்களுக்கு விலக்கு அளிப்பது என்பது, வாழ்வாதார இழப்பு, இடப்பெயர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பான நியாயமான கவலைகளை எழுப்பும் உள்ளூர் சமூகங்களின் உரிமையை பறிக்கும்.
