தேவதானப்பட்டி, டிச. 18: தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தாமோதரன் மகள் உதயகீர்த்திகா. இவர் சர்வதேச அளவில், மிகக்குறைந்த வயதில் 20 விண்வெளி வீரர்களில் இந்தியா சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் விரைவில் விண்வெளிக்கு செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உதயகீர்த்திகா தனது தந்தையுடன், சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கு வந்தார். அங்கு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்.
அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் கற்றது, ஆசிரியர்களின் தூண்டுதல், பெற்றோர்கள் ஒத்துழைப்பு, தற்போது பயின்று வரும் விண்வெளிப்பயணப் படிப்பு ஆகியவற்றை பற்றி எடுத்துரைத்தார். பின்னர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். இது குறித்து தலைமையாசிரியர் மோகன் கூறுகையில், ‘விண்வெளி வீரர் உதயகீர்த்திகா, சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கு வருகை தந்தது, தற்போது படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கும்’ என்றார்.