×

ஒரே பெண்ணை காதலித்ததில் தகராறு வாலிபருக்கு கொலை மிரட்டல்: சரக்கு ஆட்டோ உடைப்பு, 5 பேர் கைது

ஆவடி: ஆவடி அருகே ஒரே பெண்ணை காதலிப்பதில் ஏற்பட்ட தகராறில், வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்து, சரக்கு ஆட்டோவை உடைத்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.     ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை, தெலுங்கு காலனியை சேர்ந்தவர் பிரகாஷ் (18).  எலக்ட்ரீசியன். இவர் அதே பகுதி, டிபன்ஸ் காலனியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். மேலும்,  அதே பெண்ணை திருநின்றவூர், பிரகாஷ் நகரைச் சேர்ந்த பிரவீன் (20) என்பவரும் காதலித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம்  இருந்து வந்துள்ளது.  இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பிரவீன் தனது நண்பர்களான பாலவேடு, கரிமேடு அண்ணா நகரைச் சார்ந்த பிரேம்குமார் (22), மோகன்ராஜ் (20), மணி (18) இலக்கியன் (22) ஆகியோருடன் பிரகாஷ் வீட்டு அருகே வந்துள்ளார். பின்னர், அவர்கள் அனைவரும்  பிரகாஷை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, அவர்கள் அனைவரும் சேர்ந்து அவரை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.  இதற்கிடையில், அவர்கள் அனைவரும் வரும் வழியில் முத்தாபுதுப்பேட்டை பஜாரில் ரவி (55) என்பவருக்கு சொந்தமான சரக்கு ஆட்டோவின் கண்ணாடிகளை அடித்து உடைத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் முத்தாபுதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் போலீசார் இந்த வழக்கு தொடர்பாக பிரவீன், பிரேம்குமார், மோகன்ராஜ், மணி, இலக்கியன் ஆகிய 5 பேரையும் நேற்று மாலை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Teenager ,death ,dispute ,Truck auto breakdown ,
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...