நத்தம், டிச. 16: நத்தம் அருகே செந்துறை ஊராட்சி சந்தைப்பேட்டை அருகே கலையரங்கம் உள்ளது. இதனை அப்பகுதி மக்கள், விழாக்காலங்களில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவற்றை ரேஷன்கடையாக மாற்றி அமைத்து வாடகைக்கு விட செந்துறை ஊராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராமமக்கள் நேற்று முன்தினம் இரவு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த திமுக ஒன்றிய செயலாளர் பழனிசாமியிடம் பொதுமக்கள் முறையிட்டனர். பின்னர் சம்மந்தப்பட்ட நிர்வாகம், உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும் என கூறியதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.