திருத்துறைப்பூண்டி, டிச.16: திவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ் தலைமையில் நடைபெற்றது .முன்னாள் எம்எல்ஏ மாரிமுத்து, மாநிலக் குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு, நகர செயலாளர் ரகுராமன், ஒன்றிய குழு உறுப்பினர் வேதரெத்தினம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மனுக்களோடு வேதை சாலையில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று தாசில்தாரிடம் மனுக்கள் அளித்தனர். நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக பெய்த கனமழை காரணமாக முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு உடனே புதிய வீடு கட்டித்தர வேண்டும், முழு சேதமடைந்த வீடுகளுக்கு 30 ஆயிரம் ரூபாயும், பகுதியாக சேதமடைந்த வீடுகளுக்கு 15 ஆயிரம் ரூபாயும் உடனே அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கைகள் வலியுறுத்தி 1000மனுக்கள் அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.