×

2017ல் துவக்கி வைக்கப்பட்ட நிலையில் கிடப்பில் போடப்பட்ட கருங்குளம் வகுளகிரி குளம் சீரமைப்பு பணி எப்போது நிறைவேறும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பு

செய்துங்கநல்லூர், டிச. 16: கருங்குளத்தில் 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட குளத்தை தூர் வாரி, நடைபாதை பூங்கா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க ஒரு ஊர் நூறு கைகள்  திட்டத்தின் கீழ் 2017 ஜூன் கருங்குளம் வகுளகிரி மலையடிவார குளம் தூர்வாரும் பணியும் துவங்கியது. அப்போதைய சப் கலெக்டர் தீபக் ஜேக்கப் பணியை துவக்கி வைத்தார். அப்போது குளத்தில் அமலைச்செடிகள் அகற்றி, தூர்வாரப்படுவதுடன், நாலுபக்கமும் தடுப்புச்சுவர் கட்டி நடைபாதை மற்றும் பூங்கா அமைத்து தெருவிளக்கும் அமைக்கப்படும். மேலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியும்,  பூங்காவை பராமரிக்க ஏற்பாடு செய்யப்படும். குளத்திலிருந்து அள்ளப்படும் கரம்பை மண் விவசாயிகளுக்கு இலவசமாக கொடுக்கவும் ஏற்பாடு நடந்து வருவதாக தெரிவித்தார்.ஆனால் குளம் தூர்வாரும் பணி இரண்டு வருடங்களை கடந்தும் முடிவுக்கு வரவில்லை. தொடங்கப்பட்ட நிலையில் கிடப்பில் போடப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ அதுபோலவே தற்போதும் குளம் உள்ளது. அமலைச்செடிகள் அகற்றப்படவில்லை. நடைப்பயிற்சி, பூங்கா உள்ளிட்ட எந்த பணிகளும் நடைபெறவில்லை. இதனால் சாலையோரத்தில் எப்போது விபத்து நடைபெறும் என கேள்விக்குறியுடன் உள்ளது. எனவே குளத்தை சீரமைத்து, பூங்கா, நடைபாதை அமைக்க வேண்டுமென அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து கிராம மக்கள் நலக்குழு செயலாளர் உடையார் கூறும்போது, கடந்த 2017ல் நீர்நிலைகளை பாதுகாப்பு ஒரு ஊர் நூறு கைகள் திட்டத்தின் கீழ் குளத்தை சீரமைத்து பூங்கா அமைக்கப்படும் என்றார்கள். ஆனால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. முன்னாள் கலெக்டர் சந்தீப் நந்தூரி குளங்களை பராமரிக்க திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தினார். சிறப்பு திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் குளம் பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால் வகுளகிரி குளம் சீரமைக்கப்படவில்லை. இதற்கிடையில் கலெக்டரும் பணியிடம் மாற்றப்பட்டார். எனவே புதிய கலெக்டர் செந்தில்ராஜ் குளத்தை சீரமைக்க உத்தரவிட வேண்டும் என்றார்.

Tags : public ,pond ,
× RELATED செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாவட்ட அளவில் சிறப்பிடம்