- நாரத மங்களம்
- பச்சாய்
- அம்மன்
- மன்னார் ஈஸ்வரன் கோயில்
- தெரோட்டம் கோலகலம்
- பட்டலூர்
- பச்சாய் அம்மன் மற்றும்
- மன்னார் ஈஸ்வரன் கோயில் திருவிழா
- அலத்தூர் தலுகா நடர்மங்கலம்
- த்ரோட்டம்
- பெரம்பலூர் மாவட்டம்
- அலத்தூர் தாலுகா நடர்மங்கலம் கிராமம்
- பச்சாய் அம்மன்
பாடாலூர்: ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில்பச்சாயி அம்மன், மன்னார் ஈஸ்வரன் கோயில் திருவிழாவையொட்டி இன்று தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பச்சாயி அம்மன், மன்னார் ஈஸ்வரன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் தேர் திருவிழா கடந்த 22- ம் தேதி இரவு வடக்கிமலை அடிவாரத்தில் குடியழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. திருவிழாவில் பாரம்பரிய முறைப்படி பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பச்சாயி, மன்னார் ஈஸ்வரன், பூவாயி, காத்தாயி, விநாயகர் வீதியுலா நடைபெற்றது.
நேற்று இரவு காத்தாயி சுவாமி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மாவலிங்கையார் இல்லத்திற்கு வந்தது. பின்னர் பெருமாள் கோயில் முன்பு வீதி உலா தொடங்கி முக்கிய வீதியின் வழியாக சென்று மன்னார் ஈஸ்வரன் கோவிலை சென்றடைந்தது. இன்று காலை கோயிலில் பொங்கல், மாவிளக்கு பூஜை நடந்தது. பின்னர் மதியம் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் பச்சாயி அம்மன் சுவாமி எழுந்தருளினார். பின்னர் திரளான பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் சுவாமிக்கு அர்ச்சனை செய்தனர். பக்தர்களின் ஓம் சக்தி, பராசக்தி கோஷங்கள் முழங்க தேர் கம்பீரமாக அசைந்தாடி கோயில் வளாகத்தை சுற்றி வலம் வந்து நிலையை அடைந்தது. இதைத்தொடர்ந்து பூக்குழி மிதித்தல் நடைபெற்றது.
விரதமிருந்த பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் நாட்டார்மங்கலம், ஈச்சங்காடு, மருதடி, கூத்தனூர், நாரணமங்கலம், விஜயகோபாலபுரம், சீதேவிமங்கலம், செட்டிகுளம், ஆலத்தூர்கேட், இரூர், பாடாலூர் போன்ற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்டத்தையொட்டி பாடாலூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நாளை (சனிக்கிழமை) மஞ்சள் நீராடுதல் மற்றும் குடிவிடுதல் நிகழ்ச்சிகளுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை நாட்டார்மங்கலம் பச்சாயி அம்மன், மன்னார் ஈஸ்வரன் சுவாமி வழிபாட்டு குடிமக்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
