=========================================================
கீழக்கரை, டிச.15: பெரியபட்டினம் ஊராட்சியில் 30க்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த சலவைத் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சலவைத் தொழிலாளர்களுக்கு துணி துவைக்க பெரியபட்டிணத்தில் தனியாக குளம் இருந்தது. நீண்ட காலமாக அந்த ஊரணியில் துணிகளை துவைத்து வந்தனர். திடீரென அந்த ஊரணி தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் துணிகளை துவைப்பதற்கு சலவைத் தொழிலாளர்கள் பெரும் சிரமம் அடைந்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்ட அக்பர் ஜான் பீவி, தான் வெற்றி பெற்றால் ஆக்கிரமிப்பை அகற்றி புதிய குளம் ஏற்படுத்தித் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி ஆக்கிரமிப்பு நிலங்களை ஊராட்சி நிர்வாகத்தினர் கையகப்படுத்தி ரூ.5.30 லட்சம் மதிப்பீட்டில் குளம் அமைத்துக் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து பெரியபட்டினம் சலவைத் தொழிலாளர்கள் ஊராட்சி தலைவர் அக்பர் ஜான் பீவிக்கு நன்றி தெரிவித்தனர்.
அப்போது ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ் கான், துணைத்தலைவர் புரோஸ்கான் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் உடன் இருந்தனர்