×

இளம்பெண்களுக்கு தொடர்ந்து தொல்லை: கேரள காங்கிரஸ் எம்எல்ஏ மீது வழக்கு

திருவனந்தபுரம்: கேரளாவில் சமூக ஊடகங்களில் இளம்பெண்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறி பாலக்காடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மாங்கூட்டத்தில் மீது குற்றப்பிரிவு போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவர் ராகுல் மாங்கூட்டத்தில். மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். இந்தநிலையில் சமூக ஊடகங்கள் மூலம் தனக்கு தொல்லை கொடுத்து வருவதாகவும், ஓட்டலுக்கு உல்லாசத்திற்கு அழைத்ததாகவும் மலையாள நடிகை ரினி ஆன் ஜார்ஜ் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து வேறு சில இளம்பெண்களும் ராகுல் மாங்கூட்டத்திலுக்கு எதிராக புகார் கூறினர். ஒரு இளம்பெண்ணை கருச்சிதைவுக்கு வற்புறுத்தியதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பான சமூக ஊடக சாட்டுகளும் வெளியானது. தொடர்ந்து எம்எல்ஏ, இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்யக்கோரி கம்யூனிஸ்ட், பாஜ கட்சியினர் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினர். இந்தநிலையில் ராகுல் மாங்கூட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இது ஒருபுறம் இருக்க ராகுல் மாங்கூட்டத்தில் மீது கேரள குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதன்படி சமூக ஊடகங்களில் பெண்களின் விருப்பத்திற்கு மாறாக பின்தொடர்ந்து துன்புறுத்துதல், பெண்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது, கட்டாய கருக்கலைப்பு செய்யத் தூண்டும் வகையில் தகவல்களை அனுப்பியது, தொலைபேசி அழைப்புகள் மூலம் அவர்களை அச்சுறுத்தியது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து புகார் கூறிய இளம்பெண்களிடம் விசாரணை நடத்தவும், அதன் பிறகு ராகுல் மாங்கூட்டத்திலிடம் விசாரணை நடத்தவும் குற்றப்பிரிவு போலீசார் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Kerala Congress MLA ,Thiruvananthapuram ,Palakkad Congress ,MLA ,Rahul Mangkuttamal ,Kerala ,Rahul ,Congress MLA ,Palakkad ,
× RELATED விவாதம் இன்றி மசோதாக்களை ஒன்றிய அரசு...