×

பலாத்கார வழக்கில் கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வந்த இரட்டை சகோதரர்களுக்கு சரமாரி அரிவாள் வெட்டு: 8 பேர் கும்பல் கொலைவெறி

திருமங்கலம், டிச.15:  திருமங்கலம் அருகே கற்பழிப்பு வழக்கில் கோர்ட்டிற்கு சென்று திரும்பிய இரட்டை சகோதரர்களை 8 பேர் கும்பல் சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பேரையூர் அருகேயுள்ள பெருக்காமநல்லூரை சேர்ந்தவர் அமாவாசை. இவரது மகன்கள் மது மற்றும் மாதவன். இரட்டையர்கள். இவர்கள் மீது 17 வயது சிறுமியை பாலியல் செய்த வழக்கு உள்ளது. இது தொடர்பாக நேற்று சகோதரர்கள் இருவரும் டூவீலரில் மதுரை கோர்ட்டிற்கு சென்றுவிட்டு திருமங்கலம் வழியாக மீண்டும் ஊருக்கு திரும்பினர்.

மதியம் 2 மணியளவில் திருமங்கலத்தை அடுத்த சாத்தங்குடி பாலம் அருகே பின்னால் வேன் மற்றும் டூவீலரில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் இவர்களை வழிமறித்தது. அரிவாள் மற்றும் கத்தியுடன் அவர்களை துரத்தினர். மாதவன் அருகேயுள்ள முள்காட்டிற்குள் புகுந்தார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் அவர் மீது கத்தி மற்றும் கற்களை வீசியதில் காயமடைந்தார். மதுவை சுற்றி வளைத்த கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த மது அவர்களிடம் இருந்து போராடி தப்பியோடினார். உடனே அங்கு வந்த வாகனங்களில் அந்த கும்பல் தப்பி சென்றது. பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவம் பீதியை ஏற்படுத்தியது.

தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வெட்டு காயமடைந்த மது மற்றும் மாதவனை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயமடைந்த மது மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சம்பவம் குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : gang murders ,court ,
× RELATED அனைத்து மாவட்டங்களிலும் சதுப்புநிலம்...