சென்னை: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கரும்பூர் பஞ்சாயத்திற்குட்ப்பட்ட பகுதியில் அனைத்து தரப்பினருக்கு பொதுவான ஸ்ரீபாலமுருகன் கோவில் உள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகம் ஆகஸ்ட் 28ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவில் பொதுக்கோவில் அல்ல எனக்கூறி கோவிலுக்கு நுழைய விடாமல் பட்டியலின மக்களை சில தனி நபர்கள் தடுப்பதாக கூறி அக்கிராமத்தை சேர்ந்த பூபாலன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்து அறநிலைய துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கரும்பூர் முருகன் கோவில் பொது கோவில்தான். அனைவருக்கும் வழிபட உரிமை உள்ளது என்று தெரிவித்தார். இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, எந்த சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் கோவிலுக்குள் நுழைய அனைவரையும் அனுமதிக்க வேண்டும். அனைவரும் கடவுளிடம் தங்கள் பிரார்த்தனைகளை வைக்க அனுமதிக்கப்பட வேண்டும். எனவே, இன்று நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தில் அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம். இதற்கு எவரேனும் இடையூறு செய்தால் காவல்துறை அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். கோவில் கும்பாபிஷேகத்திற்கு காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
