×

கூலிப்படையினர் 4 பேரிடம் விசாரணை ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் மேலும் 3 பேர் கைது

திருவண்ணாமலை, டிச.11: திருவண்ணாமலையில், ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பங்க் பாபு(47). முன்னாள் அதிமுக நகர செயலாளர் கனகராஜ் கொலை வழக்கில், இவர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, ஜாமினில் வந்தவர். இந்நிலையில் கடந்த 3ம் தேதி 4 பேர் கொண்ட கூலிப்படையால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். எனவே, முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில், கனகராஜின் மனைவி ஞானசவுந்தரி உள்ளிட்ட 5 பேரை ஏற்கனவே தனிப்படை போலீசார் கைது செய்தனர்.அதன் தொடர்ச்சியாக, ஞானசவுந்தரியின் தம்பி விவேகானந்தன்(30), பெரும்பாக்கம் ரோடு எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த கார்த்திக்(25), ஊசாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ்(28) ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இந்த கொலையில் தொடர்புடைய கூலிப்படையைச் சேர்ந்த 4 பேரும் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். கொலையில் மேலும் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிந்ததும், கூலிப்படையினரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.

Tags : mercenaries ,murder ,real estate tycoon ,
× RELATED மூத்த நடிகர் ஜனகராஜ் நடிப்பில் ‘தாத்தா‘ குறும்படம் !