சீர்காழி, டிச.10: சீர்காழி அருகே வெள்ளப்பள்ளம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலை முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலை முற்றிலும் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் வெள்ளப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளானார்கள். இதனை தொடர்ந்து சீர்காழி ஊராட்சி ஒன்றிய ஆணையர் கஜேந்திரன், கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, பொறியாளர் தாரா, ஓவர்சியர் சந்திரசேகர் ஆகியோர் சேதமடைந்த சாலையை பார்வையிட்டனர். உடனடியாக சாலையின் இரு புறங்களில் சவுக்கு மரங்கள் நடப்பட்டு மணல் மூட்டைகளை கொண்டு சாலை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி தொடங்கவில்லை என்றால் சாலையே இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும். மழைக்காலம் முடிந்து தரமான சாலை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.