சென்னை: ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கில் 36 கோடி ரூபாய் செலுத்துமாறு அவரது சட்டப்பூர்வ வாரிசான தீபாவுக்கு எதிராக அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கில் 36 கோடி ரூபாயை செலுத்துமாறு அவரது சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபாவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்து, தீபா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்த போது தீபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.சத்தியகுமார், சட்டப்படி 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட வேண்டும். ஆனால், ஏழு நாட்களில் வருமான வரியை செலுத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நோட்டீசில் கூறப்பட்டுள்ளது. அதனால், வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். இதை பதிவு செய்த நீதிபதி, வருமான வரி நோட்டீசின் அடிப்படையில் வசூல் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு செப்டம்பர் 2ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு வருமான வரித்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
