சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022 ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் சூர்யமூர்த்தி சார்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்தது உள்ளிட்ட பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து, அதிமுக உறுப்பினர் எனக் கூறி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி உரிமையியல் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சூரியமூர்த்தி, அதிமுக உறுப்பினரே அல்ல எனவும், உறுப்பினராக இல்லாத சூரிய மூர்த்தி கட்சி செயல்பாடு குறித்து கேள்வி எழுப்ப முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த 4வது உதவி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சிவசக்திவேல் கண்ணன், கட்சி விதிப்படி பொதுச்செயலாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த விதிகளின்படி பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று தெரிவிக்கவில்லை என்பதால், இந்த வழக்கு விசாரணைக்குரியது எனக் கூறி சூரியமூர்த்தியின் வழக்கை நிராகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு நீதிபதி பி.பி.பாலாஜி முன்பு விசாரணைக்கு வந்தது.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆகியோர் ஆஜராகினர். மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதிடும்போது, வழக்கு தொடர சூரியமூர்த்திக்கு உரிமை இல்லை. அவர் கட்சி உறுப்பினர் இல்லை. இதை சிவில் நீதிமன்றம் கவனிக்க தவறிவிட்டது என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி, உரிமையியல் நீதிமன்றத்தில் சூரிய மூர்த்தி தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து விசாரணையை செப்டம்பர் 3ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
