×

71ம் ஆண்டு கொண்டாடும் பவானிசாகர் அணை: இதுவரை 32 முறை நீர்மட்டம் 100 அடியை தொட்டது; 5 முறை முழு கொள்ளளவான 105 அடி எட்டியது

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்தில் பவானிசாகர் அணை அமைந்துள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்றபின் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான ஒன்றிய அரசு முதலாம் ஐந்தாண்டு திட்டத்தில் அணைகள் கட்டுவதற்கு முக்கியத்துவம் அளித்தது. இத்திட்டத்தில், பவானிசாகர் அணை கட்ட ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 1948ம் ஆண்டு பவானி ஆறும், மோயாறும் கலக்கும் இடத்தில் ரூ.10.50 கோடி செலவில் கட்டுமான பணி தொடங்கப்பட்டது. தொடர்ந்து 7 ஆண்டுகள் நடைபெற்ற கட்டுமான பணி 1955ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி நிறைவு பெற்றது.

அன்றைய தினம் அப்போதைய சென்னை மாகாண முதலமைச்சர் காமராஜர், அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். தமிழகத்தில் தஞ்சை டெல்டா பாசனத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பாசனப்பரப்பு கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மூலம் கீழ்பவானி பிரதான வாய்க்காலில் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர, பவானி ஆற்றுப்பாசனத்தில் தடப்பள்ளி வாய்க்கால் மூலம் 17 ஆயிரத்து 654 ஏக்கர் நிலங்களும், அரக்கன் கோட்டை வாய்க்கால் மூலம் 6 ஆயிரத்து 850 ஏக்கர் நிலங்களும், காலிங்கராயன் வாய்க்கால் மூலம் 17 ஆயிரத்து 776 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

அணையின் மொத்த உயரம் 120 அடி ஆகும். இதில், சேறு கழித்து 105 அடி வரை நீர் தேக்கி வைப்பதால் 105 அடி என கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த அணையின் கட்டுமான பணி நடைபெற்ற போது 1953ல் அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேருவும், சென்னை மாகாண முதல்வர் ராஜாஜியும் கட்டுமான பணியை நேரில் பார்வையிட்டுள்ளனர். 1950ல் மிக உயரிய தொழில்நுட்பமுள்ள இயந்திரங்களை அணை கட்டுமான பணிக்கு பயன்படுத்தியுள்ளனர். இதற்கு தேவையான இயந்திரங்கள் லண்டனிலிருந்து வரவழைக்கப்பட்டது என அணை கட்டுமான பணிக்கு சென்ற இப்பகுதியை சேர்ந்த பெரியவர்கள் கூறுகின்றனர்.

இந்த அணை கட்டப்பட்டதால் தரிசுநிலங்கள் நஞ்சை நிலங்களாக மாறின. லட்சக்கணக்கான விவசாயிகள், விவசாய கூலித்தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது. நகரங்கள் முதல் கிராமங்கள் வரை குடிநீர் வழங்க ஏதுவானது. நாடு போற்றும் இந்த அணை இன்றுடன் 70 ஆண்டுகளை கடந்து 71ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. பவானிசாகர் அணை கட்டி முடிக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் இதுவரை 32 முறை அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. 23 முறை 102 அடியை தொட்டுள்ளது. 5 முறை அணை தனது முழு கொள்ளளவான 105 அடியை எட்டியுள்ளது. இதில், கடந்த 2018ம் ஆண்டு முதல் 2022 வரை தொடர்ச்சியாக 5 ஆண்டுகளும் அணை நீர்மட்டம் 102 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் அணை முழு கொள்ளளவான 105 அடியை தொட்டது சிறப்பாகும்.

* வெள்ள அபாய எச்சரிக்கை
நீலகிரி மலைப் பகுதியில் பரவலாக பெய்த மழையால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 101.71 அடியாக இருந்தது. விரைவில் 102 அடி எட்டும் நிலையில் உள்ளதால் 5 ஆயிரம் கனஅடி முதல் 10 ஆயிரம் கனஅடி வரை உபரிநீர் பவானி ஆற்றில் திறக்கப்படலாம் என்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Bhavanisagar Dam ,Sathyamangalam ,Erode district ,India ,Union government ,Jawaharlal Nehru ,
× RELATED திருநெல்வேலியில் பொருநை...