கம்பம், டிச. 9: கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொழுநோய் கண்டறியும் தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. இதில் மாவட்ட தொழுநோய் துணை இயக்குனர் ரூபன்ராஜ், மருத்துவ அலுவலர் சுதா, டாக்டர் முருகானந்தம், வட்டார மேற்பார்வையாளர் ரமேஷ்பாபு, சுகாதார ஆய்வாளர் சூரியகுமார் மற்றும் செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர். முகாமில் கலந்து கொண்ட தன்னார்வலர்களுக்கு தொழுநோயை கண்டறியும் பயிற்சி, வீடுகள்தோறும் சென்று ஆண் பெண் இருபாலருக்கும் தனித்தனியாக பரிசோதனை செய்யும் முறைகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. பின்னர் சித்த மருத்துவர் சிராஜுதீன் கூறுகையில், ‘இப்பயிற்சிக்கு ஒவ்வொரு கிராமத்திலும் 1500 பேருக்கு ஒரு ஆண் ஒரு பெண் என எனவும், நகரங்களில் 350 முதல் 400 வீடுகளுக்கு இருவர் என தனித்தனியாக தன்னார்வலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு கணக்கெடுப்புக்கான படிவங்கள் வழங்கப்படும். இதனை வட்டார தொழுநோய் ஆய்வாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் கண்காணிப்பர். இக்கணக்கெடுப்பு பணி மார்ச் மாதம் வரை நடைபெறும்’ என்றார்.