பெரம்பலூர், ஆக.14: பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினமான நாளை 15 ஆம்தேதி கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளதாக மாவட்டக் கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 கிராம ஊராட்சிகளிலும், சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை (ஆக. 15ம் தேதி) கிராமசபைக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கிராம சபைக் கூட்டத்தில் அனைத்து கிராமசபை உறுப்பினர்களும் தவறாது கலந்து கொண்டு, கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கண்டறிதல் வேண்டும். அரசு நலத்திட்டங்களை கூட்டத்தில் வழங்குதல் வேண்டும். அரசு நிர்வாகத்தில் உள்ள குறை பாடுகளை மக்களிடையே கேட்டறிதல் வேண்டும்.
கிராம சபைக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II, ஜல் ஜீவன் திட்டம், இதர பொருட்கள் ஆகிய கூட்டப் பொருட்கள் பற்றி விவாதிக்க வேண்டும்.
அனைத்துத் துறை வாரியான அலுவலர்கள் தவறாது கிராம சபைக்கூட்டங்களில் கலந்து கொள்வதோடு, துறை தொடர்பான திட்டங்கள் பொது மக்கள் நன்கு அறியும் வகையில் கூறிடவேண்டும். கிராம சபைக்கூட்டம் நல்ல முறையில் நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வட்டாரம் வாரியாக, மாவட்ட நிலை அலுவலர்கள் மண்டல அலுவலர்களாக கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப் பட்டுள்ளனர்.
நாளை நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் கிராமசபை உறுப்பினர்களாகிய வாக்காளர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப் படையான நிர்வாகத்திற்கும், ஆக்கப்பூர்வமான ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சிகளின் இதர பொருட்கள் குறித்தும் விவாதிக்க அனைவரும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
