கடலூர்: கடலூர் ஆல்பேட்டையில் வீட்டின் படுக்கையறையில் புகுந்த நாகப்பாம்பை கடவுள் முருகன் என அழைத்து குடும்பத்தினர் வழிபட்ட சம்பவத்தால் நெகிழ்ச்சி ஏற்பட்டது. கடலூர் ஆல்பேட்டை கூட்டுறவு நகரை சேர்ந்தவர் கடல் நாகராஜன். வழக்கம்போல நேற்று இரவு குடும்பத்துடன் தூங்க சென்றனர். அப்போது, வீட்டின் படுக்கையறையில் உள்ள மெத்தை கட்டிலில் நாகப்பாம்பு ஒன்று கிடந்தது. இதை பார்த்த குடும்பத்தினர் பரவசம் அடைந்து சாமி கும்பிட்டனர். மேலும் வீட்டில் இருந்த பெண் ஒருவர் பாம்பை பார்த்து,‘வந்து விட்டாயா முருகா, இன்று உனக்கு பூஜை செய்தோம், நீ எங்களது வீட்டிற்கு வந்து விட்டாய்,’ என கூறியபடி கையெடுத்து கும்பிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் இதுகுறித்து கடலூர் பாம்பு பிடி வீரர் செல்லாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடி வீரர் செல்லா வீட்டில் படுக்கையறையில் இருந்த நாகப்பாம்பை லாவகமாக பிடித்து, வெள்ளி கடற்கரையில் உள்ள காப்பு காட்டிற்கு கொண்டு சென்று விட்டனர்.
