×

தனியார் கட்டிடத்தில் செயல்படும் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை 2 ஆண்டுகளில் காலி செய்ய வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை காலி செய்து கட்டிடத்தை ஒப்படைக்கக் கோரி, உரிமையாளர்களான, கோட்டூர்புரத்தைச் சேர்ந்த சரத்குமார், வெங்கடேஷ், சவுத்திரி ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த மனுவில், மாதம் 10 லட்சத்து 14 ஆயிரத்து 300 ரூபாய் என வாடகை நிர்ணயித்து, 2022ம் ஆண்டு ஜனவரி முதல் 11 மாதங்களுக்கு குத்தகை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஒப்பந்தப்படி வாடகை தராமல் பொதுப்பணித் துறை வழிகாட்டி மதிப்பீட்டின் அடிப்படையில் மாதம் 6 லட்சத்து 8 ஆயிரத்து 438 ரூபாய் வாடகையாக நிர்ணயித்து, 2022 ஜனவரி முதல் நவம்பர் வரைக்கும் 82 லட்சத்து 16 ஆயிரத்து 824 ரூபாய்க்கு காசோலை வழங்கப்பட்டது.ஒப்பந்தத்துக்கு மாறாக வாடகை நிர்ணயித்ததால் மாதத்துக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பை சந்தித்திக்கிறோம்.

குத்தகை காலத்தை நீட்டிக்க மறுத்த நிலையில், எந்த ஒப்பந்தமும் இல்லாமல் கட்டிடத்தை பயன்படுத்தி வருவது சட்டவிரோதம் என்பதால், அதனை காலி செய்து எங்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கட்டிடத்துக்கான வாடகை 6 லட்சம் ரூபாயில் இருந்து 13 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது. இந்த கூடுதல் தொகை 2.18 கோடி ரூபாயை 2025 டிசம்பர் 31ம் தேதிக்குள் மனுதாரர்களுக்கு வழங்க வேண்டும். இரண்டு ஆண்டுகளில் கட்டிடத்தில் இருந்து காவல் ஆணையர் அலுவலகத்தை காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Tags : Tambaram Police Commissioner's Office ,Madras High Court ,Chennai ,Sarathkumar ,Venkatesh ,Chaudhary ,Kotturpuram ,
× RELATED வடலூர் சாலையில் முதியவர் தவறவிட்ட...