×

பெரியபாளையம் அருகே புதர் மண்டி காணப்பட்ட சிறுவர் பூங்கா சீரமைப்பு

ஊத்துக்கோட்டை: பெரிபாளையம் அருகே, எல்லாபுரம் ஒன்றியம், பனப்பாக்கம் கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தை சுற்றியுள்ள இளைஞர்கள் பயன்பாட்டிற்காக, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் கடந்த 2016-2017ம் ஆண்டு தாய் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் செலவில் அம்மா உடற்பயிற்சி கூடம் மற்றும் சிறுவர்கள் பூங்கா அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த உடற்பயிற்சி கூடமும், பூங்காவும் 3 ஆண்டுகள் திறக்கப்படாமல் கிடந்தது. அப்போது, ‘தினகரன்’ நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக இவை இரண்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில், உடற்பயிற்சி கூடத்தின் அருகில் சிறுவர்கள் விளையாட அவர்களுக்கு பூங்கா அமைக்கப்பட்டது. நாளடைவில், முறையான பராமரிப்பின்றி பூங்கா புதர்மண்டி காணப்பட்டது. இதில், பாம்பு மற்றும் விஷப்பூச்சி நடமாட்டம் அதிகரித்ததால், சிறுவர்கள் அச்சப்பட்டு விளையாட வராமல் இருந்தனர். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் மழைநீர் பூங்காவில் தேங்கி சேறும் சகதியுமாக காணப்பட்டது.

எனவே, புதர்கள் மண்டியும், சேறும் சகதியுமாக கிடக்கும் பூங்காவை சீரமைக்க வேண்டும். மேலும், உடற்பயிற்சி கூடத்தில் துருப்பிடித்துள்ள உடற்பயிற்சி சாதனங்களை சுத்தம் செய்தும், பூங்கா சீரமைத்தும் மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து, தினகரன் நாளிதழில் 19ம் தேதி (நேற்று) படத்துடன் செய்தி வெளியானது. இதையறிந்த, ஊராட்சி நிர்வாகத்தினர் சிறுவர்கள் பூங்காவில் இருந்த புற்கள், மழை நீர் உள்ளிட்டவைகளை அகற்றினர். மேலும், உடற்பயிற்சி உபகரணங்கள் ஓரிரு நாட்களில் சீரமைக்கப்படும் என ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Tags : Peripalayam ,Uthukottai ,Panappakkam village ,Yellapuram ,Rural Development ,Local Government Department ,
× RELATED கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில்...