×

சிபிஐயின் அலட்சியத்தால் நீதி தடம் புரள்கிறது: வங்கி கடன் முறைகேடு வழக்கில் ஐகோர்ட் கிளை கடும் கண்டனம்

மதுரை: சிபிஐயின் அலட்சியம் மற்றும் ஒத்துழைப்பு இல்லாதது நீதியின் நோக்கத்தை தடம் புரளச் செய்கிறது என ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. அரசுடமை வங்கியில் நடந்த பல கோடி கடன் முறைகேடு தொடர்பான புகாரை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் இரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். அப்போது சிபிஐ தரப்பில், மாநிலத்திற்குள் சிபிஐ விசாரணை நடத்த டெல்லி போலீஸ் சட்டப்படி மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும். இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு விசாரணைக்கு ஒப்புதல் தரவில்லை எனக் கூறப்பட்டது.

அரசு தரப்பில், சிபிஐ விசாரணைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையை தொடரலாம் எனக் கூறப்பட்டது. இதற்கு சிபிஐ தரப்பில், புகாரில் குறிப்பிட்டுள்ள நபர்கள் குறித்து விசாரணை நடத்தவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மோசடியில் தொடர்புடைய பொது ஊழியர்கள், தனிநபர்களை சேர்க்க நினைத்தால் ஒப்புதல் பெறவில்லை என கூற வாய்ப்புள்ளது. இதனால் விசாரணை நடத்த முடியாத நிலை உள்ளது எனக் கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ஒப்புதலில் அடையாளம் காணப்படாத தனி நபர்கள், பொது ஊழியர்கள் குறித்து சேர்க்கப்படாததை காரணம் காட்டி சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் இருப்பதும், விசாரணையை நிறுத்துவதும் நியாயமல்ல. அரசு மற்றும் சிபிஐயின் அலட்சியம் மற்றும் ஒத்துழைப்பு இல்லாதது நீதியின் நோக்கத்தை தடம்புரளச் செய்துள்ளது. இதை நிர்வாக குறைபாடாக கருத முடியாது. பொறுப்புகளிலிருந்து தவறுவதாகும். சிபிஐ விசாரணை நடத்த அனுமதி பெறுவதற்கு பதிலாக புகார்களை திரும்ப அனுப்புவது, கடிதங்களை எழுதுவது மற்றும் அனுமதிக்காக காத்திருப்பது என முடிவெடுத்தது சரியல்ல.

இந்த நடத்தையை ஏற்க முடியாது. கடுமையான நிதிக் குற்ற புகார்களில் செயல்படாமல் இருப்பது விசாரணை அமைப்பின் நம்பகத்தன்மையை சிதைக்கிறது. நீதி தாமதத்துக்கு சிக்கலான நடைமுறைகள் மட்டும் காரணம் அல்ல. இரு துறைகளின் ஈகோ மற்றும் அரசியல் காரணங்களாலும் நீதி தாமதமாகிறது. இந்த செயல்பாட்டை நீதிமன்றம் அமைதியாக பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. பொதுத்துறை வங்கியில் இருந்து புகார் வந்தவுடன் மாநில அரசின் ஒப்புதல் கிடைத்ததும், அந்த ஒப்புதல் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமானதாக இருந்தாலும் தாமதம் இல்லாமல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையை தொடங்க வேண்டும். நடைமுறை தாமதங்களை மறுபரிசீலனை செய்து இனிமேல் இதுபோல் நடைபெறாமல் இருக்க தலைமை செயலர், சிபிஐ இயக்குனர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநில அரசு மற்றும் மத்திய விசாரணை அமைப்புகளின் ஒத்துழைப்பு என்பதை ஒரு கடமையாக கருதாமல் செயல்படும்போது நியாயமான விசாரணை என்ற எண்ணமே சரிந்து விடும். இந்த வழக்கை பொறுத்தவரை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். அந்த விசாரணையின்போது, அதே குற்றத்துடன் தொடர்புடைய பிற தனிநபர்களின் பங்கு – பொது ஊழியர்களாக இருந்தாலும் சரி. அல்லது தனியார் நபர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் மீது சிபிஐ சட்டப்படி சுதந்திரமாக நடவடிக்கை எடுக்கலாம். குற்றத்தில் தொடர்புடையவர்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பொது ஊழியர்களாக இருந்தால் வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அனுமதி பெற வேண்டும். அதிக மதிப்புள்ள நிதி மோசடி வழக்குகளில் மாநில அரசுக்கும். சிபிஐக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : CBI ,HC ,Madurai ,Madurai HC ,
× RELATED கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு...