ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் கரையோர பகுதிகளில் தொடர் மழை காரணமாக வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.
நிவர் புயல் காரணமாக தொடர் மழையால் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் ஏரி கடந்த 26ம் தேதி திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் நாகலாபுரம், நந்தனம், சுருட்டபள்ளி வழியாக ஊத்துக்கோட்டையை அடைந்து. பின்னர், சிட்ரபாக்கம் தடுப்பணை நிரம்பி பெரியபாளையம், பொன்னேரி வழியாக பழவேற்காடு கடலில் கலக்கிறது. ஆரணியாற்றில் தண்ணீர் வரத்தால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், அடுத்த புயலான புரெவி புயல் காரணமாக ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் ஏரி மீண்டும் நிரம்பியதால் நேற்று காலை 10 மணிக்கு 3வது முறையாக 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பொன்னையா ஆரணி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல உத்தரவிட்டுள்ளார்.