×

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீட்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கலெக்டர்களுக்கு உத்தரவு; மருத்துவ உதவிகளை குறைவின்றி வழங்கவும் அறிவுரை

சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் குமரியில் நடைபெற்று வரும் மீட்பு பணிகளை விரைவுபடுத்த கலெக்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டிச.17 மற்றும் 18ம் தேதிகளில் பெய்த அதிகனமழை காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பெருக்கை எதிர்கொள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்வேறு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த 19ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து, இம்மாதத்தில் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ள இரண்டு பெரிய வெள்ள பாதிப்புகளுக்குத் தேவைப்படும் நிதியினை தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்குமாறு கோரிக்கை மனுவை முதல்வர் அளித்திருந்தார். இதனையடுத்து உடனடியாக சென்னை திரும்பிய முதல்வர் எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு சென்று அங்கு தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள நிவாரணப் பணிகள் குறித்தும், மீட்புப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

அவரிடம் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், சேத விவரங்களையும் முதல்வருக்கு விரிவாக எடுத்துரைத்தார். மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுடன் முதல்வர் வீடியோ கால் மூலமாக பேசி, அவர்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், வழங்கப்படும் உணவு மற்றும் மருத்துவ உதவிகள் குறித்தும் கேட்டறிந்தார். தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி கலெக்டர்களுடனும், வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே. பிரபாகர் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி ஆகியோருடன் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

ஆய்வின் போது, நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும், மருத்துவ உதவிகளையும் குறைவின்றி செய்து கொடுக்க வேண்டும் என கலெக்டர்களிடம் முதல்வர் அறிவுறுத்தினார். சென்றடைய முடியாத நிலையில் உள்ள கிராமங்களில் உள்ள மக்களின் நிலை மற்றும் அவர்களை மீட்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறித்தும் கேட்டறிந்தார். அப்பணிகளை விரைவுபடுத்தவும் கேட்டுக் கொண்டார். தண்ணீர் சூழ்ந்துள்ள கிராமங்களில் சிக்கியுள்ள மக்களுக்கு உணவு வழங்கல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் உத்தரவிட்டார்.

மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினார். பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோரை முதல்வர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் நிலையை கேட்டறிந்து உரிய அறிவுரைகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு சென்று அங்கு தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள நிவாரணப் பணிகள் குறித்தும், மீட்புப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

The post நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீட்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கலெக்டர்களுக்கு உத்தரவு; மருத்துவ உதவிகளை குறைவின்றி வழங்கவும் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Nellai ,Thoothukudi ,Chief Minister ,M.K.Stalin ,CHENNAI ,Thenkasi ,Kumari ,Nellai, Thoothukudi ,Dinakaran ,
× RELATED நெல்லை மாநகர பகுதியில் சாலையில்...