×

நாகை அருகே ஹிஜாப்பை அகற்றும்படி இஸ்லாமிய மருத்துவரிடம் தகராறில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் மீது வழக்குப்பதிவு..!!

நாகை: நாகை அருகே இரவு பணியில் இருந்த அரசு பெண் மருத்துவரிடம் ஹிஜாப்பை அகற்றும்படி தகராறில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாகை மாவட்டம் திருப்பூண்டியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரை நெஞ்சுவலி காரணமாக அதேபகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் இரவு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அங்கு பணியில் இருந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பெண் மருத்துவர் சுப்பிரமணியை பரிசோதித்துள்ளார்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக சுப்பிரமணியை நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும்படி மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். அப்போது நோயாளியுடன் சென்றிருந்த பாஜக நிர்வாகி புவனேஷ் என்பவர், பெண் மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மருத்துவர் அணிந்திருந்த ஹிஜாப்பை அகற்றும்படியும் அவர் தகராறில் ஈடுபட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து பாஜக நிர்வாகியை கைது செய்யக்கோரி இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த நாகை துணை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் பாஜக பிரமுகர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மதப்பிரச்சனையை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post நாகை அருகே ஹிஜாப்பை அகற்றும்படி இஸ்லாமிய மருத்துவரிடம் தகராறில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் மீது வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Nagai ,Dinakaran ,
× RELATED நாகை மாவட்டத்தில் கள்ளச்சந்தையில்...