திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.1,100 கோடியில் அதிநவீன வசதியுடன் புதியமுனையம் கட்டப்பட்டுள்ளது. 134ஏக்கரில் 75ஆயிரம் சதுரஅடியில் கட்டப்பட்டுள்ள இந்த முனையத்தில் 4 நுழைவுவாயில், 12 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முனையத்தில் ஒரே நேரத்தில் உள்நாட்டு பயணிகள் 1500 பேரையும், வெளிநாட்டு பயணிகள் 4000 பேரையும் கையாள முடியும். 750 கார்கள் இருக்கும் வகையில் பார்க்கிங் வசதி அமைக்கப்பட்டுள்ளது.
நவீன முறையில் விமானங்களை அதன் குறிப்பிட்ட எல்லைக்குள் நிறுத்துவதற்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 45 மீட்டர் உயரத்தில் உயர்மட்ட கண்காணிப்பு கோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதன் மூலம் ஓடுதள பகுதிகளை 360 டிகிரி கோணத்தில் கண்காணிக்க முடியும். இந்தியாவின் கலை, கலாச்சாரம் கட்டிட திறனை உலகுக்கும் பறைசாற்றும் வகையில் இந்த புதிய முனையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகள் அனைத்தும் 95 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. கட்டுமான பணிகள் நிறைவடைந்ததையொட்டி விமான நிலைய புதிய முனையத்தை ஜனவரி 2ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். நிகழ்ச்சி நடைபெறும் நேரம் மற்றும் கலந்து கொள்ள உள்ளவர்களின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. பிரதமர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பை அதிகரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
The post திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையத்தை ஜன.2ல் மோடி திறக்கிறார் appeared first on Dinakaran.