×

மருத்துவக் கல்லூரி கட்டிடங்கள் கட்டுவதில் முறைகேடு; இபிஎஸ் மீதான புகாரில் வழக்குப்பதிவு செய்ய அனுமதி: தமிழ்நாடு அரசு ஒப்புதல்

சென்னை: அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடங்கள் கட்டுவதில் முறைகேடு புகார் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர் என 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டன.

இந்த 11 மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 மாணவர்கள் படிக்கும் வகையில் ரூ.4,080 கோடி செலவில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க கடந்த அதிமுக ஆட்சியில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளின்படி அமைக்கப்படவில்லை என்றும், மருத்துவக் கல்லூரிகள் கட்டுவதில் மிகப் பெரும் அளவில் ஊழல் நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. நாமக்கல் நகரில் மருத்துவமனை கட்டிடம் பாதி கட்டியிருந்தநிலையில் இடிந்து விழுந்தது.

இதனால், அப்போது பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளை கவனித்து வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் உள்ளிட்டோர் இந்த ஊழலில் ஈடுபட்டுள்ளதாகவும் புகார் எழுந்தது. இந்த புகார்களையடுத்து ஆதாரங்களை திரட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை எடப்பாடி பழனிசாமி மீது விசாரணை நடத்த அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது. எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராகவும், எம்எல்ஏவாகவும் உள்ளதால், இதுகுறித்து மேல் விசாரணை செய்ய அனுமதி அளிக்குமாறு தமிழ்நாடு அரசிடம் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனையேற்று, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீதான முறைகேடு புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க தமிழ்நாடு அரசின் பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன் அனுமதி வழங்கியுள்ளார். இந்த விசாரணையை சிறப்பு புலனாய்வுக்குழு வசம் ஒப்படைக்க லஞ்ச ஒழிப்புத்துறை திட்டமிட்டுள்ளது. மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கப்படலாம் என்றும் சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களை ஆராய்ந்து அதனடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் எடப்பாடி பழனிசாமி மீது மட்டுமல்லாமல் ஒப்பந்ததாரர்கள், அரசு பொறியாளர்கள் என அனைவர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த இருக்கிறது.

The post மருத்துவக் கல்லூரி கட்டிடங்கள் கட்டுவதில் முறைகேடு; இபிஎஸ் மீதான புகாரில் வழக்குப்பதிவு செய்ய அனுமதி: தமிழ்நாடு அரசு ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : EPS ,Government of Tamil Nadu ,Chennai ,Acting General Secretary ,Chief Minister ,Edapadi ,Government ,
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...