×

மறைந்திருக்கும் கணையம்… கவனம் அவசியம்!

நன்றி குங்குமம் தோழி

உடலில் வயிற்றுப் பகுதியின் பின்புறம் அமைந்துள்ள உறுப்புதான் கணையம். இதன் முக்கியமான ேவலை நாம் அன்றாடம் சாப்பிடும் உணவினை செரிக்க வைப்பது. மேலும் கணையத்தின் மிகவும் முக்கியமான பங்கு நம் உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்க செய்வது. இதில் சுரப்பதில் குறைபாடு ஏற்பட்டால், அது நீரிழிவு பிரச்னைக்கு வழிவகுக்கும். மேலும் இதில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. பொதுவாக மக்கள் மத்தியில் கணையத்தில் ஏற்படும் புற்றுநோய் குறித்து பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லை. இதய பிரச்னை அல்லது கல்லீரலில் ஏற்படும் புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்ற நோய்களுக்கு ஏற்படும் விழிப்புணர்வு கணையத்திற்கு நாம் கொடுப்பதில்லை.

அந்த உறுப்பு நம்முடைய உடலில் எங்குள்ளது, என்ன வேலை செய்கிறது என்பது பலருக்கு தெரிவதில்லை. மருத்துவ துறையில் இதனை ‘Organ Of Mystery’ என்று சொல்வது வழக்கம். ஆனால் வளர்ந்து வரும் மருத்துவ தொழில்நுட்பத்தால், இதனால் என்ன நோய் பாதிப்பு ஏற்படும் என்று கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சை முறைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கணையத்தின் செயல்பாடு, அதில் ஏற்படும் தொற்று மற்றும் நோய் குறித்து விளக்குகிறார் இரைப்பை மற்றும் குடல் நிபுணர் டாக்டர் செந்தில்நாதன்.

‘‘கணையம் வயிற்றுக்கு பின் பகுதியில் இருக்கும் ஒரு உறுப்பு. வயிறுப் பகுதி இதனை முற்றிலும் மறைத்திருப்பதால், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்தாலும் அதனை நாம் கண்டறிய முடியாது. இதன் முக்கிய வேலை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை கட்டுப்பாட்டில் வைக்கக்கூடிய இன்சுலினை உற்பத்தி செய்வது. இதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். இரண்டாவதாக இது நொதிகள் என்று சொல்லக்கூடிய என்சைம்களை சுரக்க செய்கிறது. அது உணவு செரிமானத்திற்கு மிகவும் உதவுகிறது.

நாம் சாப்பிடும் உணவு வயிற்றில் நன்கு மாவு போல் அரைக்கப்பட்டு அது குடலுக்குள் வந்தடையும் போது அங்கு இரண்டு முக்கியமான பொருட்கள் வந்து சேரும். ஒன்று பைல், இரண்டாவது பான்கிரியாட்டிக் என்சைம். இவை மூன்றும் ஒன்று சேரும் போதுதான் செரிமானம் ஆரம்பமாகிறது. பான்கிரியாட்டிக் என்சைம் என்பது கணையத்தில் இருந்து சுரக்கும் நொதிகள். இவை செரிமானத்தை தூண்டச் செய்யும் போது, குடலில் ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உடைக்கப்பட்டு உடலுக்குள் செலுத்தப் படும். இவை அனைத்தும் ஐந்து மீட்டர் அளவிலான சிறுகுடலில் நடைபெறும். நாம் சாப்பிடும் உணவு எளிதில் செரிமானமாக கணையத்தில் இருந்து வெளியாகும் நொதிகள் மிகவும் அவசியம்.

கணையத்தில் என்னெல்லாம் பிரச்னை ஏற்படும் என்று பார்த்தால் அதற்கு முக்கிய காரணம் நாம்தான் என்று சொல்ல வேண்டும். புகை மற்றும் மது அருந்தும் பழக்கம் இருந்தால் அது கண்டிப்பாக கணையத்தில் பாதிப்பினை ஏற்படுத்தும். கணையத்தில் மூன்று முக்கியமான பிரச்னைகளை கண்டறியலாம். முதலாவது அக்யூட் பான்கிரியடைட்டிஸ். அதாவது கணையத்தில் தொற்று ஏற்படுவதால் கணையம் வீக்கமடையும். இரண்டாவது கணையத்தில் ஏற்படும் கல். மூன்றாவது கணைய புற்றுநோய். இந்த மூன்று தான் கணையத்தில் ஏற்படும் முக்கிய நோய். இந்த நோய்கள் அனைத்தும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியதாக கூட மாறலாம்.

ஒவ்வொன்றும் ஒன்றோடு ஒன்றாக இணைக்கப்பட்டு இருக்கும் நோய்.இதில் 30% மது பழக்கத்தினால் பாதிப்பு ஏற்படும். இரண்டாவது பித்தப்பையில் கல் இருந்தால் அது கணையத்தை பாதிக்கும். பித்தப்பையில் கல் என்பது மிகவும் சாதாரண விஷயம் என்றாலும், அதனால் செரிமானத்தில் பாதிப்பு ஏற்பட்டால் அது நாளடைவில் கணையத்தை பாதிக்கும். பித்தப்பையில் இருந்து கல் பித்தநாளம் வழியாக குடல் பகுதியில் சேரும் போது கணைய குழாயில் அடைப்பினை ஏற்படுத்தும். இது கணையத்தில் தொற்றினை உருவாக்கும். அடுத்து ரத்தத்தில் கால்சியம் அளவு அதிகமானாலும் அது கணையத்தில் பாதிப்பினை ஏற்படுத்தும்.

நம் உடலில் சிறிய பட்டாணி அளவில் பாராதைராய்ட் சுரப்பி உள்ளது. இந்த சுரப்பி பாதிக்கப்பட்டால், அது ரத்தத்தில் உள்ள கால்சியத்தின் அளவினை அதிகரிக்கும். இதனால் கணையத்தில் பாதிப்பு ஏற்பட்டு அங்கு கல் உருவாக வழிவகுக்கும். கணையத்தில் கல் இருப்பவர்கள் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் கல் இருப்பதன் காரணமாகவும் கணையத்தில் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அதன் பாதிப்பு சிறிய அளவில் இருந்து, முன்ேப கண்டறிந்து, முறையாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் நாளடைவில், சரியாகிவிடும். ஆனால் அந்த தொற்று அதிகமாக இருந்தால் தீ பற்றுவது போல் மிக வேகமாக கணையம் முழுதும் பரவி அதனை முழுமையாக பாதிக்கக்கூடும்.

இதனால் இருதயம் மற்றும் சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தினை விளைவிக்கும். மது பழக்கத்தினால் கல்லீரல்தான் பாதிப்படையும் என்று நாம் நினைத்திருக்கிறோம். ஆனால் அது கணையத்தையும் பாதிக்கும் என்று பலருக்கு தெரியாது. இதற்கு பல சிகிச்சை முறைகள் உள்ளது. அதன் மூலம் காப்பாற்ற முடியும். ஆனால் வரும் முன் காப்போம் என்பதை நாம் அனைவரும் கடைபிடிப்பது அவசியம்.

பான்கிரியடைட்டிஸ் பிரச்னை இருந்தால் அதன் முதல் அறிகுறி வயிற்று வலி. வயிற்றை இழுத்து பிடிப்பது போல் தாங்க முடியாத வலி இருக்கும். வயிறு மட்டுமில்லை முதுகு பகுதியிலும் வலி அதிகமாக இருக்கும். வலியை தொடர்ந்து ஜுரம் கூட ஏற்படலாம். அதன் தொடர்ச்சியாக மஞ்சள்காமாலை, வயிற்று வீக்கம் போன்றவை ஏற்படலாம். ஆனால் முதல் அறிகுறி வலி. வயிற்றில் வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பிரச்னை என்ன என்று கண்டறிவது அவசியம்.

கணையத்தில் புற்றுநோய் இரண்டு விதமாக ஏற்படும். கணையத்தில் தொற்று ஏற்பட்டு, அதற்கான சிகிச்சை எடுப்பார்கள். கொஞ்சம் சரியானதும் மீண்டும் மது அருந்துவார்கள். மீண்டும் பிரச்னை சிகிச்சை, குணமாகும், மீண்டும் மது பழக்கம். இது இப்படியே தொடர்ந்தால், கணையத்தில் கிரானிக் இன்பெக்‌ஷன் ஏற்படும். அந்த சமயத்தில் கல் உருவாகும். அது நாளடைவில் புற்றுநோய் கட்டியாக மாறும். சில சமயம் எந்த ஒரு பிரச்னையும் இருக்காது. அவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கும் புற்றுநோய் ஏற்படலாம்.

கணையம் தொற்று உள்ளவர்களுக்கு, புற்று நோய் கட்டி எங்கு உருவாகிறது என்று கண்டறிவது சிரமம். இதுவே மற்றவர்களுக்கு ஏற்படும் போது கட்டியின் இருப்பிடத்தை எளிதில் கண்டறிந்து அதற்கான சிகிச்சையினை அளிக்க முடியும். மஞ்சள்காமாலை, வலி, உடல் எடை குறைவு, நீரிழிவு கட்டுப்பாட்டில் இல்லாமல் இருத்தல் போன்ற அறிகுறிகள் கணையத்தில் புற்றுநோய் ஏற்பட காரணங்களாக அமையும்.

இதற்கான சிகிச்சை நோயின் பாதிப்பு எந்த நிலையில் உள்ளதோ அதற்கு ஏற்ப மாறுபடும். இது வேகமாக பரவும். முதல் அல்லது இரண்டாவது நிலையில் இருந்தால் குணப்படுத்த முடியும். மூன்றாவது நிலை என்றால் கீமோ கொடுத்து காப்பாற்ற முடியும். ஆனால் நான்காவது நிலை என்பது கடைசி நிலை. அவர்கள் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.  ேமலே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகளை கண்டறிந்தால் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம்.

புற்றுநோய் கணையத்தில் தலை, உடல் அல்லது வால் பகுதியில் இருந்தால் அதனை அறுவை சிகிச்சை மூலம் நீக்குவது தான் சிறந்தது. தற்போது லாப்ரோஸ்கோபி அல்லது ரோபோடிக் முறையில் அறுவை சிகிச்சை செய்வதால், எங்கெல்லாம் பரவியுள்ளதோ, அந்த பகுதியை வேரோடு நீக்கிவிடலாம். தலையில் வந்தால் மட்டும் அந்த பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை நீக்கிவிட வேண்டும். உடல் மற்றும் வால் பகுதியில் வந்தால் அந்த பகுதியை மட்டும் நீக்கினால் போதுமானது.

கணையத்தை முற்றிலும் நீக்கவேண்டும் என்ற அவசியம் இருக்காது. அறுவை சிகிச்சை மூலம் கணையத்தில் ஒரு பகுதியினை நீக்கிவிட்டாலும், எஞ்சி இருக்கும் கணையம் தன் வேலையை எந்தவித தடையும் இல்லாமல் செய்யும். அதாவது அதில் இருந்து சுரக்கக்கூடிய இன்சுலின் ஒருவருக்கு வாழ்நாள் தேவைக்கு ஏற்ப சுரக்க கூடியதாக இருக்கும். அவ்வாறு குறையும் பட்சத்தில் அதற்கு நாம் மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். அது வாழ்க்கையில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. மறுபடியும் புற்றுநோய் உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

புற்றுநோய்க்கான கீமோ, அறுவை சிகிச்சை செய்த பிறகு அவர்கள் சாதாரணமாக தங்களின் வாழ்க்கையினை மேற்கொள்ளலாம். இருந்தாலும் அவர்கள் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பது அவசியம். இதன் மூலம் புற்றுநோய் மீண்டும் தென்படுகிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். சிகிச்சை முற்றிலும் முடிந்த பிறகு அவர்கள் எல்லா உணவினையும் சாப்பிடலாம், வேலைக்கு போகலாம், அன்றாட வேலையில் ஈடுபடலாம். மது அருந்துவது மற்றும் புகைப் பிடிப்பதை மட்டும் தவிர்க்க வேண்டும்’’ என்று ஆலோசனை வழங்கினார் டாக்டர் செந்தில்நாதன்.

தொகுப்பு: நிஷா

The post மறைந்திருக்கும் கணையம்… கவனம் அவசியம்! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED வயிறு நிறைய சாப்பிடறதை விட மனசு நிறைந்து சாப்பிடணும்!