×

நீர்வரத்து சீரானதால் கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

பெரியகுளம்: பெரியகுளம் அருகே, கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீரானதையடுத்து, குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இருந்து 9 கி.மீ தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளான வட்டக்கானல், பாம்பார்புரம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்தால், அருவிக்கு நீர்வரத்து ஏற்படும். விடுமுறை காலங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் களைகட்டும்.

தேனி மாவட்டம் மட்டுமல்லாமல், தமிழகத்தின் பிறமாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் இங்கு வந்து குளித்து மகிழ்வர். இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று பெய்த அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், நேற்று அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றி, பிற்பகல் 2 மணிக்கு பிறகு குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்தது. இந்நிலையில், அருவிக்கு வரும் நீர்வரத்து சீரானதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இதனால், இன்று காலை கும்பக்கரை அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post நீர்வரத்து சீரானதால் கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Kumbakarai Falls ,Periyakulam ,Western Ghats ,Periyakulam, Theni District ,
× RELATED நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும்...