அண்ணா நகர்: சென்னை அரும்பாக்கம் பாஞ்சாலி அம்மன் கோயில் அருகே பஸ் நிலையத்தில் நேற்று தூங்கி கொண்டிருந்த ஒருவரிடம் வாலிபர் செல்போனை திருட முயன்றார். அப்போது, பணியை முடித்து விட்டு அவ்வழியாக வந்த கோயம்பேடு காவலர் தங்கப்பாண்டி, பைக்கை நிறுத்தி விட்டு பிடிக்க முற்பட்டார். உடனே அந்த வாலிபர் தப்பி ஓட முயன்றபோது சினிமா பாணியில் பைக்கில் துரத்தி பிடித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர், சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (20) என தெரிந்தது. இவருக்கு கஞ்சா பழக்கம் உள்ளது.
கஞ்சா அடிப்பதற்கு பணம் இல்லை என்றால் செல்போன் திருடி அதனை குறைந்த விலையில் விற்பனை செய்து, அந்த பணத்தில் கஞ்சா வாங்கி அடிப்பது தெரியவந்தது. மேலும் சேத்துப்பட்டு பகுதியில் வீட்டின் அருகே நிறுத்து வைத்திருந்த பைக்கை திருடி கொண்டு அந்த பைக்கில் கோயம்பேடு பஸ் நிலையம் அருகே ஆட்டோவில் தூங்கிக் கொண்டிருந்த டிரைவரிடம் செல்போன் திருடியுள்ளார். பின்னர் அரும்பாக்கம் பகுதியில் உள்ள பஸ் நிலையத்தில் தூங்கி கொண்டிருந்தவரிடம் செல்போன் திருடும்போது கையும் களவுமாக பிடிபட்டார். இவர் மீது சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கு உள்ளது. இவரிடம் இருந்து பைக் மற்றும் 2 செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்ட போலீஸ்காரரை உயரதிகாரிகள் பாராட்டினர்.
The post கோயம்பேடு பஸ் நிலையத்தில் தூங்கியவரிடம் செல்போன் திருட முயன்ற வாலிபரை துரத்தி பிடித்த காவலர் appeared first on Dinakaran.