×

அர்ச்சகர் நியமனத்தில் ஜாதிக்கு எந்த பங்கும் இல்லை என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது: உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை: அர்ச்சகர் நியமனத்தில் ஜாதிக்கு எந்த பங்கும் இல்லை என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் நியமனத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்று கோயில் நிர்வாக அதிகாரி கடந்த 2018ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டார். இதை எதிர்த்து அதே கோயில் பணிபுரிந்து வந்த சுப்ரமணிய குருக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சுகனேஸ்வர் கோயில் ஆகமத்தின் அடிப்படையானது, இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ள தகுதிகள், ஆகமத்தின் அடிப்படை இல்லை என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், குறிப்பிட்ட ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றவர்களையே அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும். இதில் ஜாதிக்கு எந்த பங்கும் இல்லை என்றும் தீர்ப்பளித்திருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்பிரமணிய குருக்கள் சார்பில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், ஆகம கோயில்களில் அர்ச்சகர்களை பரம்பரையாக தான் நியமிக்க வேண்டும் என்றும், தனி நீதிபதியின் உத்தரவு உச்ச நீதிமன்றத்திற்கு எதிரானது என்றும் வாதிட்டார்.

எனவே இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, இதே மனுதாரர் தான் ஆகம கோயில்கள் எது, ஆகமத்தை பின்பற்றாத கோயில்கள் எது என்பது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு பெற்றுள்ளதாகவும், 2405 அர்ச்சகர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், குழு இன்னும் அறிக்கை சமர்ப்பிக்காத நிலையில் சேலம் சுகவனேஸ்வரர் கோயில் ஆகம கோயில்தான் என எப்படி முடிவு செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பினர். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், வழக்கு குறித்து இந்து அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப். 22ம் தேதி ஒத்திவைத்தனர். தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவும் மறுத்துவிட்டனர்.

The post அர்ச்சகர் நியமனத்தில் ஜாதிக்கு எந்த பங்கும் இல்லை என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது: உயர் நீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை அடுத்த சித்தாலப்பாக்கத்தில்...