×

குரூப் 2 இரண்டாம் நிலை தேர்வை மீண்டும் நடத்த வழக்கு தேர்வறை வீடியோ பதிவை தாக்கல் செய்ய வேண்டும்: டிஎன்பிஎஸ்சிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: பிப்ரவரியில் நடைபெற்ற குருப் 2 இரண்டாம் நிலை பொது அறிவுத்தேர்வை மீண்டும் நடத்த உத்தரவிட கோரிய வழக்கில், சிசிடிவி காட்சிகள், வீடியோ பதிவுகளை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கருப்பையா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நான் பிஏ தமிழ் பட்டப்படிப்பு படித்துள்ளேன். டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணிகளுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டது. முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றதால், மதுரை மாவட்டத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2ம் நிலை தேர்வில் பங்கேற்றேன். எனக்கு வழங்கப்பட்ட தேர்வு தாளில் எனது தேர்வு எண்ணுக்கு பதிலாக வேறொருவர் எண் இருந்தது. பலர் இது தொடர்பாக மாறி இருப்பதாக கேள்வி எழுப்பினர். இதனை தொடர்ந்து தேர்வு நிறுத்தப்பட்டு, ஒரு மணி நேரம் தாமதமாக நடைபெற்றது.

அன்று மதியம் நடைபெற்ற பொது அறிவு தேர்வுக்காக மதியம் 2.15 மணிக்கு அறைக்கு சென்றுவிட்டேன். ஆனால் தேர்வு நடத்தும் அலுவலர் 2.30 மணிக்குதான் வந்தார். வினாத்தாள் வாசிப்பதற்கான 15 நிமிட அவகாசம் வழங்கப்படவில்லை. சரியாக 5.30 மணிக்கு தேர்வு முடிக்கப்பட்டு விடைத்தாள்களை பெற்றுக் கொண்டார். வெளியில் வந்து பார்த்தபோது மற்ற அறைகளில் இருந்த தேர்வர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டதன் காரணமாக அவர்களின் மதிப்பெண்கள் கூடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

எனவே குரூப் 2, குரூப் 2ஏ தேர்வின் இரண்டாம் நிலை பொது அறிவுத்தேர்வு ரத்து செய்து மீண்டும் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி விக்டோரியா கவுரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, முறைகேடு நடந்ததாக கூறப்படும் தேர்வு மையங்களின் சிசிடிவி காட்சிகளையும், டிஎன்பிஎஸ்சி தரப்பில் தேர்வு நடந்தபோது எடுத்த வீடியோ பதிவுகளையும் தாக்கல் செய்ய டிஎன்பிஎஸ்சி செயலாளருக்கும், தேர்வு மைய பொறுப்பாளர்களுக்கும் உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 3வது வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

The post குரூப் 2 இரண்டாம் நிலை தேர்வை மீண்டும் நடத்த வழக்கு தேர்வறை வீடியோ பதிவை தாக்கல் செய்ய வேண்டும்: டிஎன்பிஎஸ்சிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : ICourt ,TNPSC ,Madurai ,
× RELATED மாணவர்களின் எதிர்காலம்...