×

கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவாக ஜிடிபி வளர்ச்சி சரிவு: தேசிய புள்ளியியல் அலுவலகம் அறிக்கை வெளியீடு!

டெல்லி: நடப்பாண்டில் முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவு சரிந்துள்ளது. முதல் காலாண்டில் டிஜிபி 7.1 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டு இருந்த நிலையில், 6.7 சதவீதமாக குறைந்துள்ளது. நடப்பு ஆண்டில் ஏப்ரல் – ஜூன் மாத காலாண்டிற்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விவரத்தை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் – ஜூன் மாத காலாண்டின் ஜிடிபி வளர்ச்சி 7.1% என கணிக்கப்பட்டிருந்த நிலையில் 6.7% ஆக குறைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது 43.64 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டிருந்த ஜிடிபி வளர்ச்சி ரூ.40.91 லட்சம் கோடியாக சரிந்துள்ளது. இது கடந்த 5 காலாண்டுகளில் அதாவது 15 மதங்களில் மிகக்குறைவான ஜிடிபி வளர்ச்சியாகும். 2023-24ன் கடைசி காலாண்டில் 7.8 சதவீதம் வளர்ச்சியடைந்த நிலையில் அதைவிடவும் குறைந்துள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 8.2ஆக இருந்தது. வேளாண் துறை வளர்ச்சியின் ஏற்ப்பட்ட பாதிப்பு ஜிடிபி வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் – ஜூன் இடையேயான காலாண்டில் 3.7% ஆக இருந்த வேளாண்துறை வளர்ச்சி நடப்பாண்டின் முதல் காலாண்டில் 2% ஆக குறைந்துள்ளது.

இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதேவேளையில் உற்பத்தி துறையில் நடப்பு கலந்து வளர்ச்சி 6.2%-லிருந்து 7% ஆக உயர்ந்துள்ளது. தொழில், ஹோட்டல், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் ஒளி தொடர்பான சேவைகள் 2023-24 நிதியாண்டில் கடைசி காலாண்டில் 9.7% ஆக இருந்ததில் இருந்து தற்போது 5.7% ஆக குறைந்துள்ளது. நிதி, ரியல் எஸ்டேட் மற்றும் தொழில் சேவைகள் 12.6%-லிருந்து 7.1% ஆக சரிந்துள்ளது. 15 மாதங்களில் இல்லாத அளவாக நாட்டின் ஜிடிபி வளர்ச்சி சரிவை சந்தித்துள்ள நிலையில், இது இந்திய பங்குச்சந்தையை தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.

The post கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவாக ஜிடிபி வளர்ச்சி சரிவு: தேசிய புள்ளியியல் அலுவலகம் அறிக்கை வெளியீடு! appeared first on Dinakaran.

Tags : National Statistics Office ,Delhi ,Dinakaran ,
× RELATED 14ம் தேதி யெச்சூரி உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு..!!