×

கள்ளச்சாவி போட்டு கதவை திறந்து ரூ.3 லட்சம், நகையை திருடிய மர்ம ஆசாமிகள்: வீட்டுக்குள் தூங்கியவர்கள் அதிர்ச்சி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே கள்ளச்சாவி போட்டு கதவைத் திறந்து ரூ.3 லட்சம் ரொக்கப் பணம், நகை மற்றும் செல்போனை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுள்ளனர். இதில் வீட்டுக்குள் தூங்கியவர்கள், காலையில் எழுந்து நகை, பணம் களவு போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த ஜெய்ஹிந்த் நகரைச் சேர்ந்தவர் அலி இம்ரான் (53). பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர் தற்போது மேற்கண்ட இடத்தில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன் தினம் இரவு வழக்கம்போல் அலி இம்ரான், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்தார்.

நேற்று அதிகாலை எழுந்து பார்த்தபோது வீட்டின் கதவு மற்றும் பீரோ திறந்திருந்ததைக் கண்டு இம்ரான் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பீரோவில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்கப் பணம், 2 சவரன் நகை மற்றும் வீட்டுக்குள் வைத்திருந்த ஒரு செல்போன் ஆகியவை திருடு போனதைக் கண்டு அவர் மேலும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் அவர் தகவல் கூறினார். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து அருகே உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். விசாரணையில் கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைக்காமல், கள்ளச் சாவி மூலம் கதவைத் திறந்து இந்த திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. வீட்டுக்குள் ஒரு குடும்பமே தூங்கிக்கொண்டிருந்த நிலையில், கள்ளச்சாவி மூலம் கதவைத் திறந்து நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்ற இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

The post கள்ளச்சாவி போட்டு கதவை திறந்து ரூ.3 லட்சம், நகையை திருடிய மர்ம ஆசாமிகள்: வீட்டுக்குள் தூங்கியவர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi ,Dinakaran ,
× RELATED கும்மிடிப்பூண்டி அடுத்த வழுதலம்பேடு...