×

செட்டிகுளத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு!

பாடாலூர்: ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி இன்று உயிரிழந்தார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் செல்வம் (48) விவசாயி. இவர் சொந்தமாக வயல் வைத்து விவசாயம் செய்து வருகிறார். இந்தநிலையில் செல்வம் இன்று மாலை வழக்கம்போல் கிணற்றில் இருந்து வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச மோட்டார் சுவிட்ச்சை போட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக மின் கசிவு ஏற்பட்டு அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு செட்டிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்தபோது, செல்வம் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவருக்கு கவிதா என்ற மனைவியும் 2 மகன்கள், ஒரு மகளும் உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

 

The post செட்டிகுளத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Alathur Taluga ,MUTHUSAMI MAHAN SELWAM ,ALATHUR TALUGA SETIKULAM VILLAGE, PERAMBALUR DISTRICT ,
× RELATED செட்டிகுளம் முருகன் கோயிலில்...