×

ஈரோடு கலெக்டர் வீட்டு பொருட்களை ஏற்றி சென்ற லாரியை மடக்கி கொள்ளை: பைக்கில் வந்த 3 வாலிபர்கள் கைவரிசை

கோவை: கோவை அருகே நள்ளிரவில் கத்தியை காட்டி மிரட்டி ஈரோடு கலெக்டர் வீட்டு பொருட்களை ஏற்றி சென்ற லாரியை மடக்கி பணத்தை கொள்ளையடித்த வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். ஈரோடு மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்தவர் கிருஷ்ணனுண்ணி. இவர் சமீபத்தில் சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். கலெக்டர் பங்களாவில் இருந்த பொருட்களை நேற்று முன்தினம் மினி லாரியில் ஏற்றினர். இந்த பொருட்கள், கிருஷ்ணனுண்ணியின் சொந்த ஊரான திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. வாகனத்தில் பொருட்களை ஏற்றிய பின்னர், கோவை அவினாசி ரோடு வழியாக பாலக்காடு நோக்கி சென்று கொண்டிருந்தது.

மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோடு கஞ்சி கோணம்பாளையம், செட்டிபாளையம் ரோடு சந்திப்பில் லாரி நள்ளிரவில் 3 மணிக்கு சென்றபோது பைக்கில் வந்த 3 பேர், லாரி டிரைவரான சென்னையை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (35) என்பவரிடம் டயர் பஞ்சராக இருப்பதாக கூறினர். இதைத்தொடர்ந்து டிரைவர் லாரியை ஓரமாக நிறுத்தி டயரில் காற்றின் அளவு குறைந்து விட்டதா? என பார்த்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 3 பேரும் அவரை சுற்றி வளைத்து கத்தியை காட்டி மிரட்டி, அவர் லாரியில் வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றனர். முத்து கிருஷ்ணன் புகாரின்படி கோவை போத்தனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஈரோடு கலெக்டர் வீட்டு பொருட்களை ஏற்றி சென்ற லாரியை மடக்கி கொள்ளை: பைக்கில் வந்த 3 வாலிபர்கள் கைவரிசை appeared first on Dinakaran.

Tags : Erode ,Govai ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத மது விற்பனை; பெண் உள்பட 7 பேர் கைது