×

10 ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனைகளை இரண்டாண்டில் செய்து முடித்துள்ளது திராவிட மாடல் அரசு: உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: 10 ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனைகளை இரண்டான்டில் செய்து முடித்துள்ளது திராவிட மாடல் அரசு என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று சென்னை ராயப்பேட்டை வி.எம்.தெரு சந்திப்பில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், எம்எல்ஏக்கள் மோகன், எழிலன், மாவட்ட செயலாளர் சிற்றரசு, பகுதி செயலாளர்கள் ஏஆர்பி.எம். காமராஜ், மதன் மோகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டர். கூட்டத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: முதல்வரின் காலை உணவு திட்டத்தில் 1.55 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர். எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் காலை உணவை அரசு பள்ளிகளில் சென்று தான் சாப்பிடுவேன், இந்த திட்டத்தால் மாணவர்கள் மட்டுமல்ல நானும் பயன் அடைகிறேன்.

2 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகளை ஈர்த்ததன் மூலம் அதிகளவிலான வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. 10 ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனைகளை 2 ஆண்டுகளில் செய்து முடித்து இருக்கிறது திராவிட மாடல் அரசு. இந்தியாவிலேயே முதல்முறையாக இரு மாநிலங்களுக்கு இடையே விளையாட்டு துறையில் தமிழ்நாடு- ஒடிசா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட மாதத்தில், 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் போட்டி நடக்கவுள்ளது. இன்னும் பல்வேறு சர்வதேச போட்டிகள் நடத்தவுள்ளோம். அதிமுகவில் தற்போது பல்வேறு அணிகள் இருக்கிறது, நான் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து மக்கள் கோரிக்கைகள் பற்றி பேசினேன். அதிமுகவினர் பஞ்சாயத்து செய்வதற்காகவே டெல்லிக்கு செல்கின்றனர். எடப்பாடி பழனிசாமிக்கும்-அண்ணாமலைக்கும் இடையே மோதல் நிலவியது.

அப்போது அமித்ஷா, அவர்களை அழைத்து பஞ்சாயத்து நடத்திய பின் இருவரும் வெட்கமே இல்லாமல் மீண்டும் சேர்ந்து கொண்டார்கள். திமுக மட்டும் ஆட்சியில் இல்லையென்றால் மாநிலத்தின் பெயரையே மாற்றி இருப்பார்கள். சனாதனத்தை அழிக்க பிறந்தது தான் திராவிடம். அதானி குறித்த உண்மைகளை வெளிப்படுத்தியதற்காகவே ராகுல் காந்தியை பதவி நீக்கம் செய்துள்ளார் பிரதமர் மோடி. இதற்கெல்லாம் ஒரு விடிவு காலம் வர வேண்டும். அனைத்து மாநில முதல்வர்களும் நமது முதல்வர் என்ன செய்கிறார் என்பதை கவனிக்கின்றனர். நமது முதல்வர் யாரை கை காட்டுகிறாரோ அவர் தான் அடுத்த பிரதமர் என்ற நிலைமை இந்தியா முழுவதும் உருவாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் நாம் பெற போகும் வெற்றி, ஒட்டு மொத்த இந்தியாவுக்கான வெற்றியாக இருக்கும். கடந்த சட்டமன்ற தேர்தலில் அடிமைகளை விரட்டி தமிழ்நாட்டு விடியலை தந்தோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாசிசத்தை வீட்டுக்கு அனுப்புவோம். இவ்வாறு அவர் பேசினார்.

The post 10 ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனைகளை இரண்டாண்டில் செய்து முடித்துள்ளது திராவிட மாடல் அரசு: உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Dravidian model government ,Udayanidhi Stalin ,Chennai ,Minister ,Udayanidhi ,Dravida model government ,Stalin ,
× RELATED 4ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும்...